ஜெ. விடுதலைக்கு எதிரான வழக்கில் மறுவிசாரணைக்கு உத்தரவு? உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பரபர தகவல்கள்
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான கர்நாடகாவின் மேல்முறையீட்டு வழக்கில் மீண்டும் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1991-96 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது வழக்கு. 18 ஆண்டுகாலம் நடந்த இவ்வழக்கில் ஜெயலலிதா, தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்து சிறைக்கு சென்றார். ஆனால் ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி அதிரடியாக தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலலிதா உள்ளிட்டோர் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
அத்துடன் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசும், திமுக பொதுச்செயலர் அன்பழகனும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வெளியிடப்படும் என்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்த விவாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்டனை உறுதியானால்...
இவ்வழக்கில் கர்நாடகாவின் வாதங்களை ஏற்றால் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்யக் கூடும். அப்படி உறுதி செய்யும்போது சிறை தண்டனை எவ்வளவு காலம் என்பதையும் உச்சநீதிமன்றம் தெரிவிக்கலாம். அப்படி தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தால் ஜெயலலிதா உடனே முதல்வர் பதவியில் இருந்து விலக நேரிடும்; மேலும் 6 ஆண்டுகாலம் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலையும் உருவாகும்.
விடுதலை செய்தால்...
ஜெயலலிதா தரப்பு வாதங்களை ஏற்று சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது. அப்படி ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அவர் தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியும். அதே நேரத்தில் கர்நாடகா அரசு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்யும்....
மீண்டும் ஹைகோர்ட்டுக்கு....
மற்றொரு வாய்ப்பாக இருதரப்பு வாதங்களையும் ஏற்று கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கே மீண்டும் வழக்கை திருப்பி அனுப்பக் கூடும். அப்படி திருப்பி அனுப்பும்போது சுட்டிக்காட்டப்பட்ட கணக்குப் பிழைகளை சரி செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிடலாம்...
ஆனால் விசாரணையின் போதே நீதிபதி அமித்வா ராய், இதற்கான சாத்தியம் இல்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார். அப்படி செய்வது ஜெயலலிதா உள்ளிட்டோரை தண்டிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தை நெருக்கடிக்குள்ளாக்குவதாகிவிடும்... அது நீதியானது அல்ல எனவும் கூறியிருந்தார் நீதிபதி அமித்வாராய்.
மறுவிசாரணை
கடைசி வாய்ப்பாக சிறப்பு நீதிமன்றமே மறுவிசாரணை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிடலாம். அப்படி மறுவிசாரணைக்கு உத்தரவிட்டால் காலக்கெடுவையும் உச்சநீதிமன்றம் நிர்ணயிக்கும். அதிலும் சாட்சிகள் விசாரணை எதுவும் இல்லாமல் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள கம்பெனிகள் எப்படியெல்லாம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்க உதவின என்பது குறித்து விசாரிக்கவும் உத்தரவிடலாம்.
இந்த மறுவிசாரணைக்குத்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிடும் என்றே பல்வேறு தரப்பு தகவல்களும் கூறிவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.