கைலாஷ் சத்யார்த்தி... குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான போர் வீரன்!
டெல்லி: குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டதற்காக, இதுவரை இந்தியர்கள் பலராலேயே கேள்விப்பட்டிராத பெயருக்கு சொந்தக்காரரான கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. இது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும்.
மத்திய பிரதேச மாநிலம் விதிசாவில் பிறந்தவர் 1954ம் ஆண்டு ஜனவரி 11ம்தேதி பிறந்தவர் கைலாஷ். 6 வயதாக இருக்கும்போது பள்ளி சென்ற கைலாஷுக்கு பாட புத்தகங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. அதே பள்ளியில் தனது தந்தையுடன் வந்து ஷூக்களை பாலீஷ் மற்றும் ரிப்பேர் செய்த தன்னைவிட சிறு வயது சிறுவன்தான் அவரது கண்களுக்கு தெரிந்தான். பள்ளிக்கு செல்லாமல் இந்த சிறுவன் ஏன் ஷூவுக்கு பாலீஷ் போட வேண்டும் என்ற கேள்வி, சிறு பொறிபோல அவரது மனதில் விழுந்தது. அதுதான் பெரும் அக்கினி மலையாக வெடித்து சிதறியது பிற்காலத்தில்.
தூக்கத்திலும் விடாது துரத்திய இந்த கேள்வியின் தாக்கத்தால் தனது 11 வயதிலேயே குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார் கைலாஷ் சத்யார்த்தி. தனது உடன் படிக்கும் மாணவ, மாணவிகளை தங்களது புத்தகங்களை, ஏழை சிறுவர்களுக்கு கொடுத்து அவர்களை கல்வி கற்க உதவுமாறு, கைலாஷ் சத்யார்த்தி வேண்டுகோள் விடுத்தது அந்த வயதில்தான்.
அனைத்து இளைஞர்களுக்கும் உள்ளது போல, நல்ல வேலைக்கு செல்ல வேண்டும், வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் 26வது வயதில் கைலாஷ் சத்யார்த்திக்கும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரோ, இன்ஜினியரிங் பெரும் கவுரவமாக பார்க்கப்பட்ட அந்த காலத்திலேயே எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக கிடைத்த வாய்ப்பை உதறினார். குழந்தைகள் அடிமைத்தனத்தை நீக்குவதே தனது வாழ்நாள் லட்சியமாக இருக்கும்போது, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் வேலை அதற்கு இடையூறு என்று கருதினார்.
பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகளை, அடிமாட்டு சம்பளத்தில் வேலைவாங்கும் ஆலைகளுக்கு அதிரடியாக சென்று, அந்த குழந்தைகளை மீட்கும் பணியை தொடர்ந்தார். ஆயுதம் தாங்கிய குண்டர்களை சுற்றிலும் பாதுகாப்புக்கு வைத்திருக்கும் ஆலைகளுக்குள், அத்துமீறி நுழைவது என்பது தண்டவாளத்தில் தலையை வைத்து படுப்பதை போலத்தான் என்பதை உணர்ந்தும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அதை தனது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாற்றிக்கொண்டவர்தான் இந்த கைலாஷ் சத்யார்த்தி.
தனிமரம் தோப்பாகாது என்பதை உணர்ந்து கைலாஷ் தொடங்கிய இயக்கங்கள் இரண்டு. குளோபல் மார்ச் அகைனிஸ்ட் சைல்ட் லேபர் மற்றும் குளோபர் கேம்பைன் ஃபார் எஜுக்கேஷன் ஆகிய இரு இயக்கங்களை உருவாக்கி குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக போர் முரசு கொட்டினார் கைலாஷ் சத்யார்த்தி. இதன்பிறகுதான் நாட்டின் எல்லையை கடந்து உலகளாவிய அடிமை சிறுவர்களின் தளையை உடைக்க ஆரம்பித்தார் கைலாஷ் சத்யார்த்தி.
140 நாடுகளில் இவரது இயக்கம் செயல்பட்டு, அங்குள்ள அரசு சார்பற்ற அமைப்புகள் உதவியுடன், அந்தந்த நாட்டு அரசுகளை வலியுறுத்தி குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டுவருகிறார். கைலாஷின் முயற்சியால், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிறார்கள் எண்ணிக்கை 67ஆயிரத்தை தாண்டும்.