தருண் தேஜ்பால் உறவினரா? டெஹல்காவில் பங்கு உள்ளதா? சுஸ்மாவுக்கு கபில்சிபல் மறுப்பு
சக பெண் பத்திரிகையாளரை பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கிய விவகாரத்தில் டெஹல்காவின் முன்னாள் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தருண் தேஜ்பாலின் தாயார், மத்திய அமைச்சர் கபில்சிபலின் சகோதரி என்றும் டெஹல்காவின் கபில்சிபலுக்கு பங்குகள் இருக்கிறது என்றும் அவர் தருண் தேஜ்பாலை காப்பாற்ற முயற்சிக்கிறார் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஸ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டியிருந்தார்.
இதை கபில் சிபல் மறுத்துள்ளார். இது குறித்து கபில் சிபல் அளித்துள்ள விளக்கம்:
என் மீது ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா கட்சியினர் இந்த அளவு ஒரு மோசமான குற்றசாட்டை முன்வைத்திருப்பதை நான் எதிர்பார்க்கவில்லை. என்னை அரசியல் ரீதியாக தாக்குங்கள்.. ஆனால் என் குடும்பத்தை அதற்காக இழுக்காதீர்கள்.. தருண் தேஜ்பாலின் தாயார் என் சகோதரி அல்ல.
நான் பாஜகவையும் மோடியையும் கடுமையாக விமர்சிக்கிறேன். இதற்கு பதில் சொல்ல முடியாமல் அவதூறாக பொய்களைப் பரப்புகின்றனர். உங்களுக்கு தைரியம் இருந்தால் என்பெயரை குறிப்பிட்டு நான் தான் டெஹல்கா தருண் தேஜ்பாலை காப்பாற்ற முயற்சிக்கிறேன் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், எப்படியெல்லாம் சுரங்க ஊழலில் சிக்கிய ரெட்டி சகோதரர்களை காப்பாற்ற முயன்றார் என்பதை நானும் சொல்லவா?
டெஹல்கா நிறுவனத்தில் நான் ஒரு பங்கு கூட கேட்டதும் இல்லை.. அவர்கள் எனக்கு எந்த ஒரு பங்கையும் கொடுத்ததும் இல்லை.. என்னைப் பொறுத்தவரையில் இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது. இது ஒரு பெண்ணின் கண்ணியம்சார்ந்த பிரச்சனை என்றார்.