பவானி சிங் பல்டி அடித்தது விசித்திரமாக இருக்கிறது - கர்நாடக உயர்நீதிமன்றம்
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட் நான்கு பேரையும் ஜாமீ்னில் விடுவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுத்துப்பூர்வமாக அதை தெரிவித்த அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங், அந்த நிலையிலிருந்து பின்வாங்கி ஜாமீன் தரலாம் என்று கூறியது ஆச்சரியமாக இருக்கிறது என்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா கூறியுள்ளார்.
நேற்று ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுக்கள் மற்றும் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் நீதிபதி சந்திரசேகரா.
நீதிபதியின் கூற்றிலிருந்து... மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பல்வேறு அம்சங்கள், இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளின் அடிப்படையில் இந்த தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களின் படி, இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க எந்தவிதமான பொருத்தமான காரணமும் இல்லை என்று கோர்ட் கருதுகிறது. மேலும் இந்த மனு டிஸ்மிஸ் செய்வதற்கு உகந்ததாகவும் கோர்ட் கருதுகிறது.
நடந்திருப்பது பொருளாதாரக் குற்றம், ஊழல். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். ஊழல் வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் தற்போது புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் வழக்குகளில் பாரபட்சம் கூடாது, கடுமை தேவை என்று அது அறிவுறுத்தியுள்ளது.
ஊழல் தொடர்பான வழக்குகளில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதில் தாமதம் ஏற்பட்டால், ஏன் தாமதம் என்ற காரணத்தை விசாரணை நீதிமன்ற நீதிபதி, தலைமை நீதிபதிக்கு விளக்க வேண்டும்.
ஊழல் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் மிகவும் கடுமையாக உள்ளதோடு, மிகத் தெளிவாகவும் உள்ளது. எனவே இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கத் தேவையில்லை என்ற கருத்துக்கு இந்த கோர்ட் வருகிறது.
அரசு சிறப்பு வழக்கறிஞர் அக்டோபர் 1ம் தேதி தாக்கல் செய்த ஆட்சேபனைப் பத்திரத்தில், நான்கு பேருக்கும் ஜாமீன் அளிக்க கடுமையான ஆட்சேபனை தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அவர் வாய் வழியாக ஆட்சேபனை இல்லை என்று கூறியுள்ளார். இது வியப்பாக இருக்கிறது.
அவர் ஆட்சேபனை இல்லை என்றாலும் கூட இந்த கோர்ட் அதை ஏற்கும் மன நிலையில் இல்லை என்று கூறியுள்ளார் நீதிபதி சந்திரசேகரா.
தனது தீர்ப்பில் வரிக்கு வரி உச்சநீதிமன்றத்தை மேற்கோள் காட்டி அவர் தீர்ப்பை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.