அரசு மருத்துவமனைகளில் 'சலூன்' கட்டாயம் இருக்க வேண்டும் - கர்நாடக அரசு உத்தரவு
பெங்களூர்: கர்நாடகாவில் அனைத்து அரசு மருத்துவமனை வளாகங்களிலும் சலூன் கட்டாயம் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நோயாளிகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகள் அடர்ந்த தலைமுடி, தாடி, மீசையுடன் காணப்படுகின்றனர். நோயாளிகளின் முடிகளை திருத்தி, தாடியை ஷேவ் செய்வதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். விரைவாக குணமடைய வழிவகுக்கும். மேலும் இவர்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அரசு மருத்துவமனை வளாகங்களில் சலூன்களை திறக்க முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், மருத்துவமனை நிர்வாகங்களுக்கு மாநில சுகாதார அமைச்சர் மகேஷ் குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி முதற்கட்டமாக தாலுகா மருத்துவமனைகளில் இந்த திட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்து படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்படுத்திட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
தாடி வைத்திருக்கும் வெவ்வேறு மதத்துக்காரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கப்படும் என்றும் நோயாளிகள் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.