பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியது தவறுதான்.. ஒப்புக்கொள்கிறேன்.. விட்டுவிடுங்கள்.. கெஞ்சிய அமைச்சர்!
பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியது தவறுதான் என அமைச்சர் ரேவண்ணா ஒப்புக்கொண்டுள்ளார்.
பெங்களூரு: பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியது தவறுதான் என அமைச்சர் ரேவண்ணா ஒப்புக்கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ராமநாதபுரா என்ற பகுதி மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு வீடுகளில் வசித்த மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
அந்த முகாமிற்கு சென்று பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா, அங்கு இருந்த மக்களுக்கு அவர் பிஸ்கட் பாக்கெட்டுகளை கையில் எடுத்து வீசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சாலைகள் பழுது
இந்த நிலையில் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,மங்களூரு, குடகு, ஹாசன், சிக்கமகளூரு, மைசூரு, சாம்ராஜ்நகர், கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு ஆகிய பகுதிகளில் ரூ.365 கோடி அளவுக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. ஹாவேரி, தார்வார், தாவணகெரே, சித்ரதுர்கா ஆகிய பகுதிகளில் ரூ.60 கோடி அளவுக்கு சாலைகள் பழுதாகி இருக்கின்றன.
7 மாதங்கள் போக்குவரத்து
ஆகமொத்தம் கர்நாடகத்தில் பெய்த மழையால் ரூ.430 கோடி அளவுக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. 538 பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். சிராடி வனப்பகுதி சாலையில் இன்னும் 6, 7 மாதங்கள் வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
நல்லவர்களுக்குதான் கெட்டப்பெயர்
இதைத்தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிஸ்கட் வீசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரேவண்ணா,
நல்ல பணியை செய்பவர்களுக்கு இதுபோல் கெட்ட பெயர் வருகிறது.
விட்டுவிடுங்கள்...
தவறு நடந்துவிட்டது, விட்டுவிடுங்கள். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். சூழ்நிலை சந்தர்ப்பத்தை அறிந்து பத்திரிகையாளர்கள் செய்திகளை வெளியிட வேண்டும். நான் பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசினேன் என்று சொல்வது சரியல்ல.
பின்னால் இருந்தவர்களுக்கு..
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தேன். தவறான எண்ணத்துடன் நான் பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசவில்லை. அந்த சூழ்நிலையில் அவ்வாறு நடந்துவிட்டது. நான் பிஸ்கட் பாக்கெட்டுகளை முன்வரிசையில் இருந்தவர்களுக்கு வழங்கினேன். பின்னால் இருந்தவர்களும் கேட்டனர். அதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசினேன்.
உதவியை செய்திருப்பேனா?
பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க நான் செல்லவில்லை. நான் சென்று அவர்களுக்கு உதவினேன். 250 குவிண்டால் அரிசி, 30 ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றை நானும், எனது மகனும் எடுத்துச் சென்று அந்த மக்களுக்கு வழங்கினோம். தவறான நோக்கம் இருந்திருந்தால் இந்த உதவியை செய்திருப்பேனா? இவ்வாறு எச்.டி. ரேவண்ணா கூறினார்.