காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தேவையற்றது - மோடிக்கு கர்நாடக எம்.பி.க்கள் கடிதம்
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக எம்.பி.க்கள் கடிதம் எழுதிஉள்ளனர்.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும் மத்திய அரசு இரு மாநில முதல்வர்களை உடனடியாக அழைத்து காவிரி பிரச்சினையில் ஒரு சுமுகமான முடிவு காண முயற்சிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை 30-ந் தேதிக்கு தள்ளி வைத்து உள்ளது.
கடந்த 20-ந் தேதி காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அரசு அடுத்த 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், காவிரி மேலாண்மை வாரியம் தேவையற்றது. காவிரி நதிநீர் பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். காவிரி நதிநீர் பங்கீடு குறித்து மாநிலங்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். காவிரி விவகாரத்தில் 4 மாநில முதல்வர்கள் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.