காவிரி பிரச்சனைக்கு கர்நாடகம் வைக்கும் புதிய தீர்வு.. பயமுறுத்தும் வரலாறு!
காவிரிப் பிரச்சினைக்கு மேகதாது அணை நிரந்தரத் தீர்வாக அமையும் என கர்நாடகம் கூறியுள்ளது. ஆனால் கடந்த கால வரலாறு தமிழகத்தை யோசிக்க வைக்கிறது.
பெங்களூரு: தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு இடையே இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்து வரும் நதி நீர் பங்கிட்டு பிரச்சனைக்கு தற்போது கர்நாடக அரசு ஒரு தீர்வை முன்மொழிந்துள்ளது.
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிதாக ஒரு அணையைக் கட்டுவதன் மூலம் தமிழகத்துக்கு காவிரி நீரை தொடர்ந்து தர இயலும் என்று அறிவித்துள்ளது. ஆனால், இதை தமிழக அரசு ஒப்புக் கொள்ளுமா என்பதுதான் கேள்விக்குறியாகும். காரணம் கர்நாடகத்தின் கடந்தகால உத்தரவாதங்கள்.
கர்நாடக அரசு, காவிரி நதியின் உபரி நீரை மேகதாது அணையிலிருந்து பங்கிட்டுக் கொள்ளலாம் என முன்மொழிந்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டால், காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி, மாதம்தோறும் தொடர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் விடப்படும் என்று கர்நாடக அரசு கூறுகிறது.
ரூ. 6000 கோடியில்
இந்த அணையைக் கட்ட 6000 கோடி ரூபாய் நிதியும், 5000 ஏக்கர் நிலமும் தேவைப்படும் எனவும் கர்நாடக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி பட்டீல் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு இதற்கு கொள்கை அளவில் அனுமதியளித்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் முழுமையான அனுமதி அளித்த பிறகே அணை கட்டும் வேலைத் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கே.ஆர்.எஸ்ஸை விட பெரியது
இந்த அணை 67 டி.எம்.சி அடி கொள்ளவு உடையதாக இருக்கும். இது கிருஷ்ணசாகர் அணையின் கொள்ளளவான 45 டி.எம் சி அடியை விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் கடும் எதிர்ப்பு
இந்த அணை குறித்து தமிழக மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இது நிரந்தரத் தீர்வுக்கே வழி வகுக்கும் என்றும் கர்நாடகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அணைக்கு ஏற்கனவே தமிழக மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள் இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்பது தமிழகத்தின் வாதமாகும்.
சொன்னபடி நடந்ததில்லை
கர்நாடக அரசு கிருஷ்ணசாகர் அணையை கட்ட அனுமதி வாங்கி அணையைக் கட்டி, பிறகு 1960 மற்றும் 70ஆம் ஆண்டுகளின் காவிரி நதியின் குறுக்கே மேலும் சில அணைகளை தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்டியது என்பது வரலாறு. இந்த வரலாறும், தான் சொன்னபடி கர்நாடகம் நடந்து கொண்டதில்லை என்பதும்தான் தமிழகத்தை பெரிய அளவில் யோசிக்க வைக்கிறது.