'டுபாக்கூர் சான்றிதழ்': முன்னாள் அமைச்சர் தோமரை கட்சியிலிருந்தும் கட்டம் கட்டுகிறார் கேஜ்ரிவால்!
டெல்லி: போலி சான்றிதழ் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்திரசிங் தோமரை ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்குவதற்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி மாநில சட்ட அமைச்சராக இருந்தவர் ஜிதேந்திரசிங் தோமர். இவர் பி.எஸ்.சி. மற்றும் சட்டக் கல்வி பயின்றதாக கூறி சான்றிதழ்களைத் தாக்கல் செய்திருந்தார். இவரது சட்டக் கல்வி சான்றிதழ் போலியானது என பார்கவுன்சில் போலீசில் புகார் செய்தது.
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், ஜிதேந்திரசிங் தோமரை கைது செய்தனர். பின்னர் அவரது பி.எஸ்.சி. சான்றிதழும் போலியானது எனத் தெரிய வந்தது. இந்த சர்ச்சைகளால் தமது அமைச்சர் பதவியை தோமர் ராஜினாமா செய்தார்.
இருப்பினும் ஆம் ஆத்மி கட்சிக்கு இது பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், தோமரை கட்சியில் இருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஆராய்ந்து வருகிறது.