பூர்வீக இடத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்!… கேரளா அரசின் மிரட்டல்!!
மூணாறு: தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் குடியிருப்புகளை காலி செய்துவிட்டு ஊரைவிட்டு வெளியேற நிர்பந்தித்து வருவதாக கேரளா மாநில அரசு மீது தமிழக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். ஆதிவாசிகளின் நிலம் என்று பொய்யான சாயம் பூசி விரப்படுவதாக அச்சம் தெரிவித்துள்ளனர் அட்டப்பாடியில் வசிக்கும் தமிழர்கள்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்டது அட்டப்பாடி மலைப்பகுதி. மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்படாததற்கு முன்பு இருந்தே, அட்டப் பாடி பகுதியில் தமிழர்கள் அதிகளவில் குடியேறினர். அட்டப்பாடியில் இப்போது 15 ஆயிரம் தமிழர்கள் வசிக்கின்றனர்.
200-க்கும் அதிகமான ஆதிவாசி மலைக் கிராமங்களை உள்ளடக்கிய அட்டப்பாடியில் ஆதிவாசிகளின் இடங்களை விலைக்கு வாங்கி, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தென்னை, வாழை, பாக்கு, மா, கொய்யா, நெல்லிக்காய் உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆதிவாசிகளுக்குச் சொந்தம்
ஆதிவாசிகளின் இடம் ஆதிவாசிகளுக்கே சொந்தம் என்று 1986-ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உடனடியாக இடத்தை ஒப்படைத்துவிட்டு நீங்கள் கிளம்பலாம்' என கேரள அதிகாரிகள் தற்போது மிரட்டி வருவதால் அதிர்ச்சியடைந்துள்ளனர் தமிழக விவசாயிகள்
பொன்விளையும் பூமி
மலைக் கிராமங்களில் வசிப்பவங் கள்ல 80 சதவிகிதம் பேர் தமிழர்கள்தான். மண், கல், பாறையாக இருந்த பூமியை இப்போது பொன்விளையும் பூமியாக மாற்றியுள்ளனர் தமிழர்கள். பல ஆண்டு உழைப்பை விட்டு விட்டு வெளியேறச் சொல்லி நிர்பந்திக்கிறது கேரள அரசு.
பட்டா நிலம்
தமிழர்களை திட்டமிட்டு கேரளா அரசு வெளியேற்ற நினைக்கிறது என்று கூறும் விவசாயிகள். நிலங்களை சொந்தமாக வாங்கி பட்டா போட்டு முறையாக வரி கட்டுவதாகவும் கூறுகின்றனர். இப்போது மட்டும் ஆதிவாசிகளுக்கு சொந்தமான இடம் என்று கூறுவது என்று கேட்கின்றனர்.
பிள்ளைகளாய் மரங்கள்
தென்னையும், பாக்கும் பிள்ளைகளைப் போல வளர்ந்து நிற்கிறது. சொந்த வீடு, நிலம் இவற்றை விட்டு வெளியேறச் சொன்னால் எங்கே போவது என்று கேட்கின்றனர் தமிழர்கள்.
காலி செய்ய வேண்டும்
தமிழர்கள் மீது உள்ள கோபத்தில் ஒரு வாரத்தில் காலி செய்ய வேண்டும் என்று அரசு நோட்டீஸ் கொடுத்துள்ளது. வளர்ந்து நிற்கும் வாழை மரங்களை வெட்டிப்போட்டு விட்டு கிளம்புங்கள் என்று அரசு அதிகாரிகள் மிரட்டுகின்றனராம்.
கேரள அரசின் நிலைப்பாடு
'கடந்த 1975-ம் ஆண்டு ஆதிவாசி களின் நிலம் அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. 1986-ம் ஆண்டில் இருந்து ஆதிவாசிகளின் நிலத்தை மற்றவர்கள் வாங்கக் கூடாது என்ற சட்டமும் நிறைவேற்றப்பட்டது. 1999-ம் ஆண்டு ஐந்து ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்துள்ளவர்கள், அதனை ஆதிவாசிகளுக்கு வழங்கிட வேண்டும் என்ற சட்டமும் கொண்டுவரப்பட்டது. ஆதிவாசி குழந்தைகள் அதிகளவில் இறந்ததை அடுத்து, ஆதிவாசிகளின் நலன் காக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் அதிகாரிகள்.
தமிழக அரசு தலையிடுமா?
அரசின் இந்த நடவடிக்கைக்கு அந்தப் பகுதியில் உள்ள கேரள விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ''இங்கிருந்து ஒரு விவசாயியைக்கூட வெறியேற்ற அனுமதிக்க மாட்டோம்'' என்று கூறுகின்றனர்.
அதேசமயம் அதிகாரிகளின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ள தமிழக விவசாயிகளோ தங்களின் நலன்காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.