குழந்தைக்கு பெயர் வைப்பதில் கலப்பு திருமணம் செய்த தம்பதிக்குள் தகராறு: நீதிபதி செய்த வேலையை பாருங்க!
பெயர் வைப்பது தொடர்பாக கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டதால் நீதிமன்றமே குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: பெயர் வைப்பது தொடர்பாக கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டதால் நீதிமன்றமே குழந்தைக்கு பெயர் சூட்டிய ருசிகர சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
நீதிமன்றங்கள் அவ்வப்போது விநோதமான வழக்குகளை சந்தித்து வருவது வழக்கமான ஒன்றுதான். குறிப்பாக கணவன் மனைவிக்குள் ஏற்படும் வித்தியாசமான சண்டை சச்சரவுகள் மற்றும் கால்நடைகள் தொடர்பான வழக்குகள் அதிக கவனம் ஈர்க்கும்.
அந்த வகையில் கேரள உயர்நீதிமன்றம் ஒரு வித்தியாசமான வழக்கை சந்தித்துள்ளது. அதாவது கலப்பு திருமணம் செய்த ஒரு தம்பதி தங்களின் குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பான வழக்குதான் அது.

பெயர் வைப்பதில் பிரச்சனை
கலப்பு திருமணம் செய்த ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கும், இந்து ஆணுக்கும் அண்மையில் இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தாயிடம் குழந்தை
கணவன்-மனைவி இருவரும் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அந்த குழந்தை, தற்போது தாயின் பராமரிப்பில் உள்ளது.

எங்கள் பெயரைதான் சூட்டவேண்டும்
குழந்தைக்கு ‘ஜோகன் மணி சச்சின்' என்று ஞானஸ்நானம் செய்யப்பட்டு இருப்பதால், அதே பெயரையே சூட்ட வேண்டும் என்று தாயார் தரப்பு வாதிட்டது. ஆனால், குழந்தை பிறந்த 28-வது நாளில், இந்து முறைப்படி சூட்டப்பட்ட ‘அபிநவ் சச்சின்' என்ற பெயரே இருக்க வேண்டும் என்று தந்தை தரப்பு வாதிட்டது.

முடிவுக்கு வந்த நீதிபதி
இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காமல் தங்களின் வாதத்தில் விடாபிடியாக இருந்தனர். அவர்களின் வாதங்களை பொறுமையாக கேட்ட நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஒரு முடிவுக்கு வந்தார்.

இதில் பாதி அதில் பாதி
அதாவது இருதரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில், குழந்தைக்கு ‘ஜோகன் சச்சின்' என்று தானே பெயர் சூட்டினார். தாயாரை திருப்திப்படுத்த ‘ஜோகன்' என்ற பெயரையும், தந்தையை திருப்திப்படுத்த ‘சச்சின்' என்ற பெயரையும் எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

தீர்ப்புக்கு வரவேற்பு
குழந்தையை பள்ளியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் அவசியம் என்பதால், 2 வாரங்களுக்குள் இந்த பெயரில் பிறப்பு சான்றிதழ் வழங்குமாறு நகராட்சி பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த தீர்ப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications