110 பேர் பலியான கொல்லம் தீ விபத்து: கோவில் நிர்வாகிகள் சரண்- பட்டாசுக்கு தடை விதிக்க மறுப்பு
கொல்லம்: கேரள மாநிலம், கொல்லம் அருகே, பரவூர் புட்டிங்கல் தேவி கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பேர் பலியாயினர். இவ்விபத்து தொடர்பாக கோவில் நிர்வாகிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கோவில் தலைவர், செயலாளர் உட்பட 5 பேர் கேரள குற்றப்பிரிவு போலீசார் முன் சரண் அடைந்தனர்.
புட்டிங்கல் தேவி கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தை முன்னிட்டு பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகும். சனிக்கிழமையன்று பரணி நட்சத்திரத்திருவிழா கொண்டாடப்பட்டது.
ஞாயிறன்று அதிகாலை 3 மணியளவில் பட்டாசு வெடிக்கப்பட்ட போது, அதிலிருந்து சென்ற தீப்பொறியானது வெடிப்பொருட்கள் வைத்திருந்த குடோனில் விழுந்தது. இதனையடுத்து வெடிப்பொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது.
வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த கிடங்குக்கு அருகில் இருந்த திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கட்டிடம் ஒன்று முற்றிலும் வெடித்து சிதறியது. தீ விபத்து மற்றும் கட்டிடம் விழுந்து சிக்கியதில் சம்பவ இடத்தில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து தொடர்பாக கோவில் நிர்வாகிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கோவில் தலைவர், செயலாளர் உட்பட 5 பேர் கேரள குற்றப்பிரிவு போலீசார் முன் சரண் அடைந்தனர்.
இந்த திருவிழாவில் தடை செய்யப்பட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தி வெடிபொருட்கள் தயார் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, வெடிபொருட்களை உபயோகித்தல், பாதுகாத்தல் மற்றும் உரிமங்கள் துறை கண்காணிப்பு அதிகாரி சுதர்சன் கமல், "வெடிபொருட்கள் விதிமுறைகள் அலட்சியமாக மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வாணவேடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் குறித்து விசாரணை செய்ய இங்கு வந்துள்ளோம் என்றார்.
வெடிபொருட்கள் தயாரிப்பு நிறுவனம் தடைசெய்யப்பட்ட ரசாயனங்களை பயன்படுத்தியுள்ளமையும் தெரிய வந்துள்ளது. அடிப்படை முன்னெச்சரிக்கைகள் கூட புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
போட்டி வாணவேடிக்கை என்ற ஒன்று இருப்பதாலும் அங்கு அதிக இடவசதி இல்லாததாலும் அனுமதி அளிக்க வேண்டாம் என்று அவர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால் யாரோ அனுமதி அளிக்க அது துயரத்தில் முடிந்துள்ளது, இது பற்றியே விசாரித்து வருகிறோம் என்று கொல்லம் மாவட்ட ஆட்சியர் ஷைனமோல் கூறியுள்ளார்.
கொல்லம் மாவட்ட கூடுதல் மேஜிஸ்ட்ரேட் ஷாநவாஸ் கூறும்போது, தடை உத்தரவு மீறப்பட்டுள்ளது, யார் மீறினார்கள் என்பது விசாரணையில் தெரியவரும் என்றார்.
இதற்கிடையே புட்டிங்கல் தேவஸ்தான நிர்வாக கமிட்டியின் செயலர் கிருஷ்ணன்குட்டி பிள்ளை என்பவர் பட்டாசு வெடிக்க அனுமதி கோரி செய்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இது வெறும் பட்டாசு வெடிப்பது மட்டுமல்ல, இதில் போட்டி நடைபெறுவதாக அறிகிறோம். எனவே அனுமதி மறுக்கிறோம் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதே உத்தரவில் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே புட்டிங்கல் தேவி கோயில் வெடிவிபத்துக்கு மறுநாளான இன்று அட்டிங்கல் பகுதியில் ஸ்டோர்ஹவுஸ் ஒன்றில் சுமார் 100கிலோ வெடிபொருட்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து கொல்லம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் போலீஸ் கடும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
தேவசம்போர்டு மறுப்பு
கோவில் திருவிழாவில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியானதை தொடர்ந்து, விழாக்களில் பட்டாசு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் 1,255 கோயில்களை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு, பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.