கேரளாவில் கன மழை: நிலச்சரிவால் குமுளி- தேனி சாலை துண்டிப்பு
இடுக்கி: கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் குமுளி மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, 3 இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், தமிழக-கேரள போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கேரளா அருகே அரபிக் கடலுக்கு நகர்ந்தது. இதனால் கேரளாவில் தொடர் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கேரளாவின் தென் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல சாலைகள் ஸ்தம்பித்துள்ளன. வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் முடங்கியுள்ளனர்.
வீடுகள் இடிந்தன
திருவனந்தபுரத்தில் இதுவரை பெய்த மழைக்கு 245 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகளில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இடிக்கியுலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் ஒரு பெண் மின்னல் தாக்கி பலியானார்.
மீன்பிடித்தொழில் பாதிப்பு
கோவளம் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் மீனவர்கள் பல நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழை கோவளம் மீனவர்களின் படகுகளை கடலுக்கு இழுத்துச் சென்றது.
நெடுஞ்சாலை பாதிப்பு
குமுளி- தேனி இடையேயான நெடுஞ்சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் சாலை ஓர சுவர் இடிந்து விழுந்ததில், நெடுசாலை மூடப்பட்டுள்ளது. நெய்யாறின் கரையிலும் பெரிய மரங்கள் மழையால் சாய்ந்துவிட்டது.
3 இடங்களில் நிலச்சரிவு
தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால், லோயர் கேம்ப்-குமுளி சாலையில் வழிவிடு முருகன் கோயில், மாதா கோயில் வளைவு, எஸ் குண்டூசி வளைவு ஆகிய 3 இடங்களில் புதன்கிழமை மதியம் 2 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அரசு பேருந்து சிக்கியது
மதுரையிலிருந்து குமுளி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது. பின்னர், பேருந்திலிருந்து பயணிகள் இறக்கப்பட்டு, குமுளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், தேனி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் லோயர் கேம்ப்பில் நிறுத்தப்பட்டன. கேரளம் செல்லும் வாகனங்கள் புதன்கிழமை மாலையிலிருந்து கம்பமெட்டு சாலையில் திருப்பி விடப்பட்டன.
நடந்து செல்லும் பயணிகள்
கேரளத்துக்கு வேலைக்கு சென்றிருந்த தமிழக தோட்டத் தொழிலாளர்களும், தமிழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவர்களும் 6 கி.மீ. தொலைவுக்கு லோயர் கேம்ப்-குமுளி மலைப் பாதையில் நடந்தே சென்றனர்.
2 நாட்களுக்கு நிறுத்தம்
இந்த நிலச்சரிவினை சீர்செய்யும் பணியில், மேகமலை வனச் சரணாலய அதிகாரிகளும், காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவை சரிசெய்ய 2 நாள்கள் வரை ஆகலாமென்றும், அதுவரை போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும், வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications