உத்தமபாளையத்தில் வக்கீல்கள் போராட்டம்.. கேரள பெண் எம்.எல்.ஏவின் கொடும்பாவி எரிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த பீர்மேடு எம்.எல்.ஏ பிஜூமோளை கண்டித்து உத்தமபாளைய நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின்போது பிஜூமோள் எம்.எல்.ஏவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், தமிழக பொதுப்பணித்துறை செயற் பொறியாளரை தாக்கிய எம்.எல்.ஏ. பிஜூமோள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாண்டி என்ற வழக்கறிஞர், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்துவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கேரளாவைச் சேர்ந்த பீர்மேடு எம்.எல்.ஏ பிஜூமோள் என்பவர், 10க்கும் மேற்பட்ட அடியாட்களை அழைத்துக்கொண்டு பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் கேரளாவுக்கு சொந்தமான படகு மூலம் முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு சென்றிருக்கிறார்.
பிஜுமோளிடம், தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் மாதவன் என்பவர், "இந்தப் பகுதிக்கு செல்லக் கூடாது. நீர்தேக்கத்திற்கான வேலைகளை செய்துகொண்டிருக்கிறோம். இங்கு நீங்கள் வந்தால் பணிக்கு தடையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட பிஜுமோளும், அவருடன் வந்தவர்களும் தமிழக பொறியாளர் மாதவனை கொலை செய்யும் நோக்கத்துடன் கீழே தள்ளிவிட்டு, தரக்குறைவான வார்த்தையால் பேசியுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் பேபி அணையை சேதப்படுத்தி படம் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இதனை கண்டித்து உத்தமபாளைய வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் நடத்தியது என்றார்.












Click it and Unblock the Notifications