எனக்குத் தெரிஞ்சது 7... அதில் சிறந்தது இந்தி....ஸ்மிருதி ராணி
டெல்லி: நான் அறிந்த 7 மொழிகளில் இந்தி மொழியைத்தான் சிறந்ததாக கருதுகிறேன். அது தேசிய மொழியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி சார்பில் தாய் மொழி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், புதிதாக தொடங்கியுள்ள செம்மொழி இணைய வழிக்கல்வி, மைசூரில் உள்ள இந்திய மொழி நிறுவனத்தால் 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான 1008 சிறுகதைகள், டெல்லியில் உள்ள ராஷ்டிரிய சான்ஸ்கிரிட் சான்ஸ்தான் நிறுவனத்தால் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் புத்தகத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெளியிட்டார். பாரதியார் பாடலின் ஒரு சில வரிகளையும் அமைச்சர் பாடினார்.
உயிரான தாய்மொழி
விழாவில் தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்தியா பல்வேறு தாய் மொழிகளை கொண்ட நாடாக உள்ளது. எல்லா தாய்மொழிக்கும் ஒரே உயிர் தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவர்களது தாய்மொழியை கொண்டாட வேண்டும்.
பாரதியார் சொன்னது
மகாகவி பாரதியாருக்கு பல மொழிகள் தெரிந்தால் கூட அவர் யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது வேறு எதுவுமில்லை என்றார்.
இந்திதான் சிறந்த மொழி
அதே போல எனக்கு - மொழிகள் தெரிந்தாலும் இந்தி மொழி தான் இந்தியாவிலேயே சிறந்தது என்பேன். அந்த மொழி இந்தியாவின் தேசிய மொழி என்பதில் மிகவும் பெருமையடைகிறேன்.
காஷ்மீர் முதல் குமரி வரை
இந்தியா பல்வேறு இனம், மொழிகளை கொண்ட நாடாக இருந்தாலும், இவை அனைத்திற்கும் இந்தியா தாய்நாடாக திகழ்கிறது. இதற்காக நாம் தற்போது தாய்மொழி நாள் விழாவை கொண்டாடி வருகிறோம். இதுபோன்ற பன்முக தன்மை கொண்ட நாடு உலகில் எங்கும் இல்லை. நம் நாட்டின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை அனைவரும் தெரிந்து கொள்வதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மொழிகளின் நல்ல கருத்துக்களும் பரவியிருக்க வேண்டும்.
சவால்களை எதிர்கொள்ள
இந்தியாவின் எதிர்கால தூண்கள் இளம் தலைமுறையினர் தான். அவர்கள் இன்றைய காலகட்டத்தில் பிரச்னைகளையும் சவால் களையும் எதிர்கொள்வதற்கு பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வதில் தவறு இல்லை. ஆனாலும், அவர்களது தாய் மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்று அமைச்சர் ஸ்மிருதி கூறினார்.
பல மொழிகளில் திருக்குறள்
எத்திராஜ் கல்லூரியில் நடந்த விழாவில் மாணவிகள் திருக்குறளின் முதல் குறளை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் பாடி காட்டிய விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.