20 ஓவா லஞ்ச வழக்கை விசாரிக்க ரூ.12.5 லட்சம் செலவு செய்த லோக்ஆயுக்தா
பெங்களூர்: பெங்களூரில் உள்ள மான்யதா டெக் பார்க் எதிரே பிரியாணி கடை நடத்தி வருபவரிடம் ரூ.20 லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் பற்றிய வழக்கை விசாரிக்க லோக்ஆயுக்தா ரூ.12.5 லட்சம் செலவு செய்துள்ளது.
பெங்களூரில் பல ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் மான்யதா டெக் பார்க்கிற்கு எதிரே சாலையோரம் பிரியாணிக் கடை நடத்தி வருபவர் க்ரிஸ்தி. கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி அங்கு வந்த போலீஸ்காரர் எல்.நாராயண்(39) இரவு நேரத்தில் கடையை நடத்த அனுமதி அளிக்க ரூ.20 லஞ்சம் வாங்கியுள்ளார்.
போலீஸ்காரர் லஞ்சம் கேட்டதை க்ரிஸ்டி தனது செல்போனில் பதிவு செய்து லோக்ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். வீடியோ அல்ல குரலை மட்டும் பதிவு செய்துள்ளார்.
வரவே இல்லை
க்ரிஸ்தியின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த லோக்ஆயுக்தா போலீசார் நாராயண் லஞ்சம் வாங்க மீண்டும் வருவார் அவரை கையும் களவுமாக பிடிக்கலாம் என நினைத்து காத்திருந்தது தான் மிச்சம். அவர் அதன் பிறகு அந்த கடை பக்கமே வரவில்லை.
2 ஆண்டுகள்
ரூ.20 லஞ்சம் தொடர்பான வழக்கு விசாரணை இரண்டு ஆண்டுகளாக நடக்கிறது. 29 சாட்சியங்களின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. நாராயண் மீது கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த லஞ்ச வழக்கு தொடர்பாக இதுவரை 7 முறை நீதிமன்றத்தில் விசாரணை நடந்துள்ளது. 29 சாட்சியங்கள் பட்டியல், 25 ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது, ரூ.20 லஞ்சத்திற்கு 180 பக்க குற்றப்பத்திரிகை வேறு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.12.5 லட்சம் செலவு
ரோட்டோர பிரியாணிக் கடையில் ரூ.20 லஞ்சம் வாங்கிய வழக்கை விசாரிக்க ரூ.1 லட்சமும், இறுதி அறிக்கையை தயாரித்து சமர்பிக்க ரூ.50 ஆயிரமும், விசாரணை செலவு ரூ.5-10 லட்சமும், சாட்சியங்களுக்கான செலவு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சமும் என அரசுக்கு மொத்தம் ரூ.12.5 லட்சம் செலவாகியுள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்ற விசாரணை வேறு 1 மணிநேரம் நடந்துள்ளது.