திட்டமிட்டபடி நாளை லாரி ஸ்டிரைக் - காய்கறி உள்ளிட்ட அத்தியவாசியப் பொருட்கள் விலை கடுமையாக உயரும்!
டெல்லி: மத்திய அரசுடன் லாரி அதிபர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால், திட்டமிட்டபடி நாளை லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்று அஞ்சப்படுகிறLு.
இதுகுறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பின் சுங்க சாவடிகள் கமிட்டியின் தலைவர் சண்முகப்பா, "373 சுங்க சாவடிகளை அரசு அகற்றும் வரை அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் கண்டிப்பாக தொடங்கும். அகில இந்திய அளவில் 93 லட்சம் லாரி வாகனங்கள் உள்ளன. 1 லட்சத்து 62 புக்கிங் அலுவலகங்கள் உள்ளன.
இவற்றில் எதுவும் 1 ஆம் தேதி முதல் வேலை செய்யாது. சுமார் ரூபாய் 15 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல லாரி உரிமையாளர்களுக்கும் இழப்பு ஏற்படும். ஆனால் சுங்க சாவடிகளில் நிகழும் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
சாலை பராமரிப்பு தொடர்பாக சுமார் ரூபாய் 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று அரசு தரப்பில் கூறுகிறார்கள். அந்த 373 சுங்க சாவடிகளிலும் லாரி உரிமையாளர்கள் ரூபாய் 14 ஆயிரத்து 554 கோடி ஆண்டுக்கொரு முறை செலுத்துவதாக அரசே கூறுகிறது.
எனவே இதனை கருத்தில் கொண்டு அவர்கள் எங்களிடம் ஆண்டுக்கொருமுறை இந்த வரியை முன்னதாகவே வசூலிக்கலாம். இதற்கு நாங்கள் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எந்த காரணத்தை கொண்டும் வரி செலுத்த நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அந்த சுங்க சாவடிகளில் ஏற்படும் குளறுபடிகளையும், ஊழல்களையும் நாங்கள் எதிர்க்கிறோம். எனவேதான் இந்த நடைமுறையை நாங்கள் எதிர்க்கிறோம்.
முன்பு டீசல் மீது 2 ரூபாய் வரி விதித்தார்கள். இப்போது 6 ரூபாய் வரி விதித்திருக்கிறார்கள். சுமார் ரூபாய் 55 ஆயிரம் கோடி, ஆண்டுக்கு ஒருமுறை இதனால் அரசுக்கு வருமானம் வருகிறது. அந்த பணத்தில் இவர்கள் சாலைகளை பராமரிக்கட்டும்.
நேற்று மத்திய போக்குவரத்து துறை செயலாளர் விஜய் சிப்பர் மற்றும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இருப்பினும் இன்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறார்.
பிரதமர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் ஒழிய, எங்கள் போராட்டத்தை நிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எனவேதான் சரியான முறையை கையாள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திட்டமிட்டப்படி நாளை ஸ்டிரைக் நடைபெறுவதால்,நாடு முழுவதும் லாரிகள் ஓடாது. இதனால் காய்கறி வரத்து தடைப்படும். காய்கறி, பழங்கள், பூக்கள், பருப்பு, அரிசி பால், தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களும் சரிவர கிடைக்காமல் தடை ஏற்படும். இதனால் சேமிப்பில் உள்ள காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.