ஓவர் மப்பு.. அண்ணனை கல்லால் அடித்த மாப்பிள்ளை வீட்டார்.. திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் திருமண சடங்கின் போது, மாப்பிள்ளை வீட்டார் குடித்து ரகளை செய்ததால் கோபமடைந்த மணப்பெண் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள நாக்ராம் ஏரியாவில் கடந்த திங்களன்று திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. திருமண வேலைகளில் இருவீட்டாரும் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்க, மாப்பிள்ளை வீட்டார் சிலர் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை மணப்பெண்ணின் அண்ணன் தர்மேந்திரா தட்டிக் கேட்டுள்ளார்.
நடனத்தின் போது உண்டான இந்தப் பிரச்சினையில் ஆத்திரமடைந்த ரகளையில் ஈடுபட்டோர் தர்மேந்திராவைக் கல்லால் அடித்துள்ளனர். இதனால் பிரச்சினை மேலும் அதிகமானது. திருமண சடங்குகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
பின்னர் ஒருவழியாக சமாதானமாகி மீண்டும் திருமண சடங்குகள் மீண்டும் ஆரம்பித்தது. ஆனால், குடிபோதையில் இருந்த மாப்பிள்ளை வீட்டார் மீண்டும் தர்மேந்திராவை அடித்துள்ளனர். இதில் தர்மேந்திராவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் மீண்டும் மணப்பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர். திருமண வீடு கலவர பூமியாக மாறியது.
மாப்பிள்ளை வீட்டார் சிலர் குடித்து விட்டு தன் அண்ணனை அடித்துக் காயப்படுத்தியதால், ஆத்திரமடைந்த மணப்பெண் திருமணத்தை உடனடியாக நிறுத்தினார். மணப்பெண்ணின் உறவினர்கள் சமாதானப் படுத்தியும் அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து இருவீட்டாரும் திருமணத்திற்கு ஆன செலவுகள் குறித்த கணக்குவழக்குகளை பேசி முடித்தனர். பின்னர் மாப்பிள்ளை வீட்டார் அங்கிருந்து அதிகாலையில் கிளம்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மோதல் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மோதல் மேலும் அதிகரிக்காமல் தடுத்து, துணிந்து முடிவெடுத்து திருமணத்தை நிறுத்தியதாக மணப்பெண்ணை அவரது கிராமத்தினர் பாராட்டினர்.