ஊழல் புகாரில் சிக்கினார் பா.ஜ.கவின் இன்னொரு மகா. அமைச்சர்! ரூ.191 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு!!
மும்பை: பாரதிய ஜனதாவுக்கு 'கட்டம்' சரியில்லை போல.. அக்கட்சியின் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ஸ்மிருதி இரானி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே, மகாராஷ்டிரா அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் லலித் மோடி, கல்வித் தகுதி மற்றும் ஊழல் முறைகேடு சர்ச்சைகளில் சிக்கி நெருக்கடிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மற்றொரு மகாராஷ்டிரா அமைச்சரான வினோத் டாவ்டே ரூ191 கோடி ஒப்பந்த முறைகேட்டில் சிக்கியிருப்பது அக்கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளிகளுக்கு 62 ஆயிரத்து 105 தீயணைப்புக் கருவிகளை வாங்க மாநில அரசு திட்டமிடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு தீயணைப்புக் கருவியையும் ரூ. 8.321 விலையில் கொள்முதல்செய்து ஒரு பள்ளிக்கு தலா 3 கருவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த தீயணைப்பு கருவிகளை வாங்க மின்னணு முறையில் டெண்டர் கோராமல் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கல்வித் துறை அமைச்சர் வினோத் டாவ்டே ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதுகுறித்து அமைச்சர் டாவ்டே கூறுகையில், ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை. நிதித்துறை ஆட்சேபம் தெரிவித்த மறுகணமே ஒப்பந்த ஆணையை நிறுத்திவிட்டோம் என்றார்.
மகாராஷ்டிராவில் அண்மையில்தான் பெண்கள் நலத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே ஊழல் புகாரில் சிக்கியிருந்தார். இந்நிலையில் கல்வி அமைச்சரும் ஊழல் புகாரில் சிக்கியிருப்பது அம்மாநில பாரதிய ஜனதா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.