மேற்கு வங்கத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு உருளைக் கிழங்கு கொண்டு செல்ல மம்தா அதிரடி தடை
கொல்கத்தா: உருளைக்கிழங்கு விலை உயர்வைத் தடுக்க, மேற்கு வங்கத்தில் இருந்து வேறு மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அதன் ஏற்றுமதியை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக உருளைக்கிழங்கின் விலை அதிவேகத்தில் உயர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கிலோவுக்கு ரூ. 20-க்கு விற்ற உருளைக்கிழங்கு தற்போது ரூ. 40ஆக விலை உயர்ந்துள்ளது.
உருளைக் கிழங்கு பெருமளவில் விளையும் மேற்கு வங்கத்திலும் இதன் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த அம்மாநில மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
ஏற்றுமதிக்குத் தடை
உருளைக் கிழங்கை வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படி அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
விலை குறையட்டும்
உருளைக் கிழங்கின் விலை சராசரி நிலைக்கு வந்த பிறகே, அவற்றின் ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உருளைக்கிழங்கு லாரிகள்
இதையடுத்து அண்டை மாநிலமான ஒடிஷாவுக்கு சென்ற 250 உருளைக்கிழங்கு லாரிகளை மேற்கு வங்க மாநில போலீஸார் எல்லைச் சாவடியில் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.
ஒடிஷாவில் தட்டுப்பாடு
இந்நிலையில் ஒடிஷாவின் உள்ளூர் சந்தைகளில் உருளைக்கிழங்கு வரத்து குறைந்ததால் தேவை அதிகரித்து விலை வேகமாக உயர்ந்து வருகிறது. ஒடிஷாவில், கிலோவுக்கு ரூ. 40 வீதம் உருளைக்கிழங்கு விற்கப்படுகிறது.
ஒடிஷா அரசு நடவடிக்கை
இதையடுத்து, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தின் (நாஃபெட்) உதவியை ஒடிஷா அரசு நாடியுள்ளது.
"3 லட்சம் கிலோ உருளைக்கிழங்கை கான்பூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து ஒடிஷாவுக்கு விநியோகிக்குமாறு நாஃபெட் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக'' அம்மாநில உணவு வழங்கல் துறை அமைச்சர் சஞ்சய்தாஸ் வர்மா கூறியுள்ளார்.