”இனி மணிப்புரி மொழியிலும் சங்கத்தமிழ் திருக்குறள்” ரேபிகா தேவியின் மொழிபெயர்ப்பு
மணிப்பூர்: மணிப்புரி மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீட்டு விழா, மணிப்பூர் மாநில தலைநகரமான இம்பாலில் நடைபெற்றது.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இந்திய அரசு இன்று வரை ஒப்புதல் வழங்கவில்லை .
அதனால் இன்று வரை திருக்குறள் இந்திய பாடத் திட்டங்களில் சேர்க்கப்படவில்லை.ஆனால்,மணிப்பூரில் இதற்காக விழாவே எடுத்திருக்கிறார்கள்.
சங்கத்தமிழ் பொக்கிஷம்:
தமிழர்களின் பொக்கிஷமான திருக்குறளை தமிழர்களே தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க தயங்கும் இக்காலத்தில் திருக்குறளின் பெருமையை உணர்ந்து ஒரு மணிப்பூர் மங்கை அதனை தனது தாய் மொழியில் மொழி பெயர்த்திருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.
இணையற்ற காப்பியங்கள்:
தமிழ்நாட்டு பிள்ளைகள் வடநாட்டு நூல்களை படிக்கும் நிலையில் தமிழகத்தின் ஒப்பற்ற திருக்குறள் , தொல்காப்பியம் போன்ற நூல்களை வடநாட்டிற்கு நாம் கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை.
மதிப்பறிந்த மணிப்பூர் பெண்மணி:
ஆனால், மணிப்பூரை சேர்ந்த சொய்பம் ரேபிகா தேவி பெண்மணி திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா இம்பாலில் நடைபெற்றது. நூலை மணிப்பூர் மாநில கவர்னர் வீ.கே. துக்கள் வெளியிட்டார்.
வெளியீட்டு விழா:
நிகழ்ச்சியில் கவர்னரின் செயலாளர் டாக்டர். ஆர்.கே.நிமாய் சிங், முதலமைச்சரின் செயலாளர் என்.அசோக் குமார், சி.ஐ.சீ.டி இயக்குனர் வீ.ஜி.பூமா, சுரச்சந்பூர் துணை கமிசனர் ஜெசிந்தா லாசரஸ் , உக்ருல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வன் நாகரத்தினம் , சொய்பம் ரேபிகா தேவி, மோரே தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேசங்கள் கடந்த திருக்குறள்:
ரேபிகா தேவி போன்றவர்களின் உதவியால் இப்போது "தேசங்கள்" கடந்து திருக்குறள் சென்றுள்ளது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் ரேபிகா தேவி போன்ற தமிழ் ஆர்வலர்களை பாராட்டத் தயங்கக் கூடாது .
தமிழக அரசு வாழ்த்து கூறுமா?
அவருக்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசும் வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்ச் சங்கமும் ,மணிப்பூர் வாழ் தமிழர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.