தனியார் மருந்து நிறுவனங்களிடம் டாக்டர்கள் வாங்கிய பணம், அபார்ட்மெண்ட், கார்கள் 'லஞ்சம்'
மும்பை: தனியார் மருந்து நிறுவனங்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம், அபார்ட்மெண்ட், சொகுசு கார் உள்ளிட்டவைகளை லஞ்சமாக பெற்றதாக 300 டாக்டர்கள் மீது எழுந்த புகார் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் விசாரணையில் இறங்கியுள்ளது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று 300 டாக்டர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது.
சிபாரிசு செய்ய லஞ்சம்
மத்திய மருந்து மற்றும் உர அமைச்சக்கத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு புகார் வந்தது. அதில் அகமதாபாத்தை மையமாக வைத்து இயங்கி வரும் மருந்து நிறுவனம் ஒன்றிலிருந்து லட்சக்கணக்கில் பணம், அபார்ட்மெண்ட், சொகுசு கார், குடும்பத்தினர் வெளிநாடு சுற்றுலா உள்ளிட்டவற்றை பெற்றதாக நாடு முழுவதும் உள்ள 300 டாக்டர்கள் மீது பெயர் விபரங்களுடன் புகார் தெரிவிக்கப்பட்டது.
விலை கூடிய மருந்துகள்
மேலும் அந்த புகாரில் அந்த நிறுவனம் விதிமுறைகளை மீறி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்ததில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளது. மேலும் இவற்றின் மருந்து விலைகளும் மற்ற பிராண்டுகளை விட 15 முதல் 30 சதவீதம் வரை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் மருந்துகளை விற்பனை செய்வதற்காக டாக்டர்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு மருந்து மற்றும் உர அமைச்சகத்தில் இருந்து சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுகாதாரத்துறை இந்த புகார் குறித்து விசாரணை நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.
300 பேருக்கு சம்மன்
இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சில் புகாரில் சிக்கிய மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 7 டாக்டர்கள் உள்பட 300 பேரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.
மேலும் இதுகுறித்து விசாரணை குழு டாக்டர் கே.கே.அகர்வால் கூறுகையில், 300 டாக்டர்கள் மீது புகார் எழுப்பப்பட்டுள்ளது. சுமார் 135 டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு கவுன்சில் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
109 பேர் நேரில் ஆஜர்
109 டாக்டர்கள் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் கவுன்சில் விசாரணை நடத்தியது. மீதமுள்ளவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கவுன்சில் விதிமுறைகளின் படி 3 முறை வாய்ப்பு அளிக்கப்படும். அதற்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த விசாரணையின் போது டாக்டர்களின் கடந்த 3 ஆண்டு கால வங்கி கணக்கு, பாஸ்போர்ட் விவரங்கள், வருமான வரி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டன என்றார்.
மராட்டியத்தில் 7 டாக்டர்கள்
மராட்டியத்தில் 7 மூத்த டாக்டர்கள் இந்த புகாரில் சிக்கி உள்ளனர். இதில் 3 டாக்டர்கள் மும்பையை சேர்ந்தவர்கள். இந்த புகார் குறித்த விசாரணை தேசிய அளவிலான ஒரு இடத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து மராட்டிய மாநில மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கிஷோர் டோரி கூறுகையில், ‘‘குறிப்பிட்ட மருந்தை சிபாரிசு செய்வதற்காக டாக்டர்கள் பரிசு அல்லது பணம் பெறுவது மருத்துவ சட்டப்படி குற்றம் என்றார்.