பாத்திரம் கழுவி.. அப்பளம் சுட்ட அமைச்சர் மஸ்தான்! அந்த எளிமையிருக்கே! அசந்துபோன கேரள அதிகாரிகள்!
கொச்சின்: கேரள மாநிலம் கொச்சினில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், அப்பளம் சுட்டு பாத்திரம் கழுவி தனது எளிமையால் அங்கிருந்தவர்களை அசத்தியுள்ளார்.
கொச்சினில் தமிழக அரசு சார்பில் தமிழக ஹஜ் பயணிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவை ஆய்வு செய்யச் சென்ற அவர் இவ்வாறு எளிமையுடன் நடந்திருக்கிறார்.
இதேபோல் ஹஜ் பயணிகளோடு பயணிகளாக எல்லோரும் அமர்ந்து சாப்பிடும் இடத்திலேயே தானும் சாப்பிடுகிறேன் எனக் கூறிய அமைச்சர் மஸ்தான், தனக்காக தனி அறையும் சிறப்பு உணவு வகைகளும் வேண்டாம் என கேரள அரசு அதிகாரிகளிடம் கண்டிப்புடன் கூறிவிட்டார்.
நபிகள் நாயகத்தின் வரலாறை படிங்க.. முழு மனிதனாகலாம்! பாஜகவினருக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அட்வைஸ்
ஹஜ் பயணிகள்
சென்னையிலிருந்து இந்தாண்டு ஹஜ் விமானம் இயக்கப்படாததால் தமிழக ஹஜ் பயணிகள் அனைவரும் கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்திலிருந்து மக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. தமிழக ஹஜ் பயணிகளின் நலன் கருதி சென்னையில் இருந்து சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு விமானம் இயக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் மூலம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
கொச்சின் புறப்பாடு
இந்நிலையில் கொச்சின் சென்று அங்கிருந்து தான் விமானம் மூலம் தமிழக ஹஜ் பயணிகள் மக்கா செல்ல வேண்டும். இதனிடையே கொச்சினில் தமிழக ஹஜ் பயணிகள் தங்குவதற்கான ஏற்பாடுகளையும், அவர்களுக்கு உணவு வழங்குவதற்கான பொறுப்பையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டது. அந்த வகையில் கொச்சினில் தமிழக ஹஜ் பயணிகள் தங்கி ஓய்வெடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் ஆய்வு செய்ய அமைச்சர் மஸ்தான் கடந்த 12-ம் தேதி நேரடியாக கொச்சினுக்கே சென்றார்.
பாத்திரம் கழுவினார்
அங்கு தமிழக ஹஜ் பயணிகளை சந்தித்து தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் புறப்பட்ட முதல் குழுவை வாழ்த்தி வழியனுப்பியும் வைத்தார். இதற்கிடையே சாப்பாடு தயாரிக்கும் இடத்தில் ஆய்வு செய்த மஸ்தான், அமைச்சர் என்பதையே மறந்து தானும் களத்தில் குதித்தார். சாப்பாடு கிண்டுவது, குழம்பு வைப்பது, அப்பளம் சுடுவதும், பாத்திரம் கழுவுவது என எல்லா வேலைகளிலும் ஈடுபட்டு தனது எளிமையால் கேரள அதிகாரிகளை வியப்படைய வைத்தார்.
பந்தா இல்லாதவர்
செஞ்சி பேருந்து நிலையத்தில் தேநீர் கடை நடத்தி கவுன்சிலர், பேரூராட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், மாவட்டச் செயலாளர் என படிப்படியாக முன்னேறியவர் என்பதால், அமைச்சர் மஸ்தானிடம் எப்போதுமே எந்தவொரு பகட்டையோ, பந்தாவையோ பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.