ஹைதராபாத் ஏவுகணை வளாகத்துக்கு இன்று அப்துல்கலாம் பெயர் சூட்டப்படுகிறது
ஹைதராபாத்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கையில் மிக முக்கிய இடம்பிடித்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ) ஹைதராபாத் ஏவுகணை வளாகம் இன்று முதல் அவரது பெயரையே தாங்கி நிற்க தயாராகி நிற்கிறது...
1970களில் டி.ஆர்.டி.ஓ சுமார் 2,000 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏவுகணைகளை சோதித்துப் பார்ப்பதற்காக கையகப்படுத்தி இருந்தது. இந்த சோதனை முடிவடைந்த பின்னர் பல ஆண்டுகாலம் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் இந்த நிலம் இருந்து வந்தது.
ஒருகட்டத்தில் ஆந்திர பிரதேச அரசு இந்நிலத்தை மாநில அரசிடம் மீண்டும் ஒப்படைத்துவிட வேண்டும் என்று வலியுறுத்தியது. அப்போது அப்துல் கலாம்தான் இதில் தலையிட்டு மாநில அரசு அதிகாரிகளை சந்தித்து, நாட்டின் மிக முக்கியமான ஏவுகணை ஆராய்ச்சிக்கு இந்த இடத்தை பயன்படுத்தலாம் என ஆலோசனை கூறினார். இதன் விளைவாக எழுந்ததுதான் டி.ஆர்.டி.ஓ.வின் ஹைதராபாத் ஏவுகணை வளாகம்..
இன்று நாட்டின் ஜனாதிபதியாக, டி.ஆர்.டி.ஓவின் தலைவராக இருந்த அப்துல்கலாமின் 84வது பிறந்த நாள்.. இந்த கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை ஹைதராபாத் ஏவுகணை வளாகம் செய்து கொண்டிருப்பதை நாம் நேரிலேயே கண்டோம்..
இன்று முதல் டி.ஆர்.டி.ஓ.வின் ஹைதராபத் ஏவுகணை வளாகம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயரை தாங்கி நிற்க காத்திருக்கிறது. இந்த வளாகத்தில் பணிபுரியும் இளம் விஞ்ஞானிகளிடையே நாம் பேசியபோது, அப்துல்கலாமுடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகளுடன் நாங்களும் பணிபுரிகிறோம் என்பது பிரமிப்பாக இருக்கிறது.. நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என நெகிழ்கின்றனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசகராக உள்ள சதீஷ் ரெட்டி கூறுகையில், டி.ஆர்.டி.ஓ.வுக்கும் இந்தியாவுக்கும் அப்துல்கலாம் ஆற்றிய பணிகளுக்கு ஈடாக நாம் எதையுமே செய்துவிட முடியாது. எங்கள் ஒவ்வொருவரையும் நம்பிக்கை கொள்ள வைத்து கடினமான ஆராய்ச்சிகளை எளிமையாக முடிக்கச் செய்தவர் கலாம் என்கிறார்.
இந்த வளாகத்தில் உள்ள இமாரத் ஆராய்ச்சி வளாகம் என்பது கலாமின் கைகளில் குழந்தையைப் போல தவழ்ந்த ஒன்று.. 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந் தேதி இது உருவாக்கப்பட்டது. அப்துல்கலாம் தலைமையில் இந்திய ஏவுகணை திட்டங்களில் இந்த இமாரத் ஆராய்ச்சி வளாகம் முக்கியப் பங்கு வகித்தது. அப்துல்கலாமைப் பொறுத்தவரையில் ஹைதராபாத்தில் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையம் அமைய வேண்டும் என விரும்பினார்..அதன் விளைவாக எழுந்ததுதான் இமாரத் ஆராய்ச்சி மையம்.
இமாரத் ஆராய்ச்சி வளாகம் குறித்து தமது அக்னி சிறகுகள் நூலிலும் கலாம் நிறையவே பதிவு செய்துள்ளார். தற்போது ஹைதராபாத் ஏவுகணை வளாகமானது கலாம் பெயரை தாங்கி நிற்கப் போகிறது என்பது குறித்து கலாமின் பேரன் சேக் சலீமிடம் நாம் பேசிய போது, கலாமின் இதயத்தில் நெருங்கிய இடம்பிடித்திருந்தது இமாரத் ஆராய்ச்சி நிறுவனம். நிச்சயமாக இளம் விஞ்ஞானிகளுக்கு இந்தப் பெயர் சூட்டுதல் உந்துசக்தியாக இருக்கும் என்றார்.