முரளி மனோகர் ஜோஷியுடன் மோடி சந்திப்பு- பாதுகாப்புத் துறை ஒதுக்கப்படுமா?
டெல்லி: பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அவர் பாதுகாப்பு அமைச்சராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வசம் முக்கியமான பாதுகாப்புத் துறையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்புத் துறை அமைச்சர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சராக ஜோஷி நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பாதுகாப்பு அமைச்சராக அருண் ஷோரியை நியமிக்க நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார். இதனால் ஜோஷிக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க முடியாது என்கின்றனர் பாஜக தலைவர்கள்.