பட்ஜெட் தாக்கலின்போது இரண்டே இரண்டு முறை மட்டும் கைதட்டிய மோடி
டெல்லி: மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்தபோது பிரதமர் நரேந்திர மோடி இரண்டே இரண்டு முறை மட்டும் தான் கைதட்டி பாராட்டினார்.
2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது தான் மோடி அரசு தாக்கல் செய்த முதல் மத்திய பட்ஜெட் ஆகும்.
ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்தபோது அவையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி பார்ப்போம்.
மோடி
ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்தபோது பிரதமர் நரேந்திர மோடி மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். ரயில்வே பட்ஜெட் தாக்கலின்போதும் அவர் அப்படி தான் இருந்தார்.
பாராட்டு
ஜேட்லியின் பல்வேறு அறிவிப்புகளுக்கு அவை உறுப்பினர்கள் மேஜையை தட்டியும், கை தட்டியும் தங்கள் பாராட்டை தெரிவித்தனர்.
கைதட்டல்
அவை உறுப்பினர்கள் எல்லாம் பலமுறை கைதட்ட மோடியோ வெறும் இரண்டு முறை தான் கை தட்டினார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
வாரணாசி
வாரணாசி உள்ளிட்ட பழமை வாய்ந்த நகரங்களை பாதுகாக்கும் திட்டங்கள் குறித்து அறிவித்தபோது கூட மோடி கைதட்டவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் மோடி வாரணாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்பொழுது?
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டதாக அறிவித்தபோதும், இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கப்படுவது குறித்து அறிவித்தபோதும் தான் மோடி கை தட்டினார்.
இடைவேளை
ஜேட்லி 5 நிமிட இடைவேளை கேட்டபோது பலரும் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நடந்தனர். ஆனால் மோடி அசையாமல் அமர்ந்திருந்தார்.