அடம் பிடித்த விஐபிகள் 460 பேர், அரசு பங்களாக்களில் இருந்து வெளியேற்றம்! கடுப்பில் காங்கிரஸ்
டெல்லி: டெல்லியில் அரசு பங்களாக்களை ஆக்கிரமித்திருந்த 460 முக்கிய அரசியல் புள்ளிகளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக வெளியேற்றியுள்ளது மத்திய அரசு. இந்த அதிரடி நடவடிக்கையால், தற்போது பதவியிலுள்ள எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வீட்டுக்காக ஒதுக்கப்படும் நிதி குறையத்தொடங்கியுள்ளது.
பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் போன்ற முக்கியஸ்தர்களுக்கு டெல்லியில் அரசு பங்களாக்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். பதவிக்காலம் முடிவடைந்ததும், அடுத்தவர்களுக்கு வழிவிட்டு அந்த பங்களாக்களை விட்டுக்கொடுத்து சொந்த வீடுகளுக்கு திரும்ப வேண்டியது இந்த முக்கியஸ்தர்களின் கடமையாகும்.
வெளியேற மறுப்பு
ஆனால், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் 10 ஆண்டு காலத்தின்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட பங்களாக்களில் குடிபுகுந்த பலரும் பதவிகளை இழந்தபிறகும் பங்களாக்களைவிட்டுக் கொடுக்க மறுத்து அங்கேயே தங்கியிருந்தனர். எனவே புதிய எம்.பிக்கள், அமைச்சர்களுக்கு, அரசு நிதி ஒதுக்கி வேறு பகுதிகளில் தங்க வைக்க வேண்டிய கட்டாய செலவு ஏற்பட்டது.
உத்தரவு
இந்நிலையில், இதுபோன்ற ஆக்கிரமிப்பு விஐபிகளுக்கு எதிராக தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நகர வளர்ச்சித் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நகர்ப்புற வளர்ச்சி அமைச்சரான வெங்கய்யா நாயுடு இதில் தீவிரம் காட்டினார். பங்களாக்களை காலி செய்யாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீசுக்கு மரியாதையில்லை
அரசு நோட்டீசை சட்டை செய்யாமல் பங்களாக்களில் தொடரவே பலரும் விரும்பினர். ஏனெனில் நோட்டீஸ் அனுப்புவதும், அதை மதிக்காமல்விட்டால் சும்மா போவதும் அரசுகளின் வாடிக்கை என்று அவர்கள் கருதிக்கொண்டிருந்தனர். எனவே, மொத்தம் 439 பேருக்கு இதுபோல நோட்டீஸ் அனுப்பியதில், 44 பேர் மட்டுமே பங்களாக்களை காலி செய்தனர். ஆனால், அனைவரையும் காலி செய்ய இறுதி எச்சரிக்கைவிடுத்தது மத்திய அமைச்சகம்.
லாலு ரொம்ப வாலு
காலி செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்தவர்களில் முன்னாள் மத்திய அமைச்சரும், மாஜி பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் முக்கியமானவர். அவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ராஜ்யசபா எம்.பியாக இருந்தபோது, டெல்லியில் பங்களா பெற்றார். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதலில் ரயில்வே அமைச்சராக இருந்தார். பிறகு எம்.பியாக தொடர்ந்தார். ஆனால், ஊழல் வழக்கில் சிக்கி 2013 முதல் எம்.பி பதவியையும் இழந்தார். இருந்தாலும் பங்களாவை தர முடியாது என்று கூறிவந்தார். ஆனால், அரசோ கறாராக நடந்து, அவரது வீட்டை பூட்டி கடந்த பிப்ரவரி மாதத்தோடு கணக்கு முடித்து வெளியேற்றியது.
மாஜி பிரதமர் வாரிசுகள்
முன்னாள் பிரதமர்களான சந்திரசேகர் மற்றும் சரண்சிங் ஆகியோரின் மகன்களான நீரஜ் ஷேகர் மற்றும் அஜித் சிங் ஆகியோரும் அடம்பிடித்து தங்கிக் கொண்டிருந்ததையடுத்து, வீட்டை பூட்டி, பொருட்களை, வெளியில் தூக்கி வைத்தனர் அதிகாரிகள். மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு இதுவரை 460 விஐபிகள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால், தற்போதைய விஐபிகளுக்கு அளிக்கப்படும் அரசு நிதி குறைந்துள்ளது.
கடுப்பில் காங்கிரஸ்
தயவுதாட்சண்யம் பார்க்காமல் வெங்கய்ய நாயுடு அமைச்சகம் எடுத்துவரும் இந்த நடவடிக்கையால், காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதிருப்தியடைந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சி காலங்களில் விதிமுறைகள் இவ்வளவு கடுமையாக பின்பற்றப்பட்டது கிடையாது என்று அவர்கள் புலம்புகின்றனர். உதாரணத்துக்கு, 2004ல் பாஜகவின் வாஜ்பாய் ஆட்சி காலம் முடிவடைந்தபோது, இதே வெங்கய்யநாயுடு பங்களாவிலேயே தொடர்ந்ததாக காங்கிரசிலுள்ள சிலர் பொறுமுகின்றனர். ஆனால், மோடியின் உத்தரவுதான், இதுபோன்ற அதிரடிக்கு காரணம் என்கிறது வெங்கய்ய நாயுடு அலுவலக வட்டாரம்.