34 ஆண்டுகளுக்குப் பின்னர் மொசாம்பிக் சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி- ஒப்பந்தங்கள் கையெழுத்து!
டெல்லி: ஆப்பிரிக்கா நாடுகள் சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மொசாம்பிக் சென்றடைந்தார். கடந்த 34 ஆண்டுகளில் மொசாம்பிக் சென்ற முதலாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இந்த பயணத்தின் போது இருநாடுகளிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் ஆப்பிரிக்கா நாடுகளில் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் இன்று ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் முதல்கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையத்திலிருந்து தனி சிறப்பு விமானம் மூலம் மொசாம்பிக் தலைநகர் மபுடோ சென்றடைந்தார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் பிலிப் யூசியுடன் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது பிலிப் யூசி - மோடி முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது குறித்துப் பேசிய மொசாம்பிக் அதிபர் பிலிப் யூசி, மோடியின் மொசாம்பிக் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
பின்னர் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு சென்ற பிரதமர் மோடி, இந்திய மாணவர்களை சந்தித்தார். தென்னாப்பிரிக்காவில் நாளை வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். இந்தப் பயணத்தின்போது, தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா மற்றும் அந்நாட்டுத் தலைவர்களை சந்திக்கிறார்.
அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பது தொடர்பாக தென்னாப்பிரிக்க தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
அதன்பின்னர், தான்சானியா நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) செல்கிறார். ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் கடைசிக்கட்டமாக கென்யாவில் மோடி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
மோடி தனது சுற்றுப் பயணத்தின் போது மகாத்மா காந்தி தங்கி இருந்த இடங்களுக்குச் செல்கிறார். நெல்சன் மண்டேலா நினைவிடத்துக்கும் செல்கிறார். பின்னர் தான்சானியா, கென்யா செல்லும் மோடி, அந்நாட்டு தலைவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை சந்தித்துப் பேச உள்ளார்.