ரிசல்ட் வந்து ஒரு மாசம்கூட ஆகல.. திரிணாமுலுக்கு யூடர்ன் அடிக்கும் பாஜக தலைவர்கள்.. மமதா முடிவு என்ன
கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் வெளியாகி, இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜக சென்ற நிர்வாகிகள் பலர், தற்போது மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பி வருகின்றனர்.
கடந்த மாதம் மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களில் வெற்றி பெற்றது. அதேநேரம் பாஜகவால் வெறும் 77 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது
மேற்கு வங்க தேர்தல்
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் பிரசாரத்தின் சமயத்தில் திரிணாமுல் தலைவர் மம்தாவுக்கு திடீரென காலில் காயம் ஏற்பட்டது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. அதுபோக கொரோனா பரவல் காரணமாகக் கடைசி சிலகட்ட தேர்தல்களில் பொதுக்கூட்டம், பேரணி ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டன. மேலும், பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் மேற்கு வங்கத்தில் பல கட்ட பிரசாரங்களை மேற்கொண்டார்.
பெரும் சிக்கல்
இவை அனைத்தையும்விட திரிணாமுல் கட்சிக்கு மற்றொரு முக்கிய பிரச்சினை இருந்தது. அக்கட்சியின் பல தலைவர்கள், தேர்தலுக்கு சில வாரம் முன்பு வரை, பாஜகவில் ஐக்கியமாகத் தொடங்கினர். இது அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சரிவை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டதாகப் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். தேர்தலுக்கு முன், இதைச் சமாளிப்பதே பெரும் வேலையாக இருந்தது,
தலைகீழானது
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. பாஜகவில் ஐக்கியமான பல திரிணாமுல் தலைவர்களும், நிர்வாகிகளும் மீண்டும் மம்தாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பு, பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் இருந்த ராஜீப் பானர்ஜியும் தற்போது மீண்டும் திரிணாமுல் கட்சியில் இணைய விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திரிணாமுல் கருத்து
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், "தலைவர்கள் மட்டுமல்ல, ஏழு முதல் எட்டு பாஜக எம்.எல்.ஏக்கள், 4 எம்.பி.க்கள் ஆகியோரும் திரிணாமுல் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், இது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கவில்லை. ஆனால் எங்கள் கட்சி தொண்டர்கள் உணர்வுகளையும் நாங்கள் மதிக்கிறோம். இவர்கள் தேர்தலுக்குச் சற்று முன்னர் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது" என்றார்.
மம்தா பானர்ஜி
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைய விரும்பும் தலைவர்கள் விஷயத்தில் மம்தா சற்று நிதனமாகவே முடிவெடுக்க வேண்டும் என்பது கட்சியின் நிர்வாகிகளின் விருப்பம். ஏனென்றால் இவர்கள் தேர்தலுக்காகக் கட்சி மாறியவர்கள். எனவே, மீண்டும் இப்படிச் செய்யாமல் இருப்பார்கள் என முழுவதுமாக நம்ப முடியாது, அதேநேரம், இவர்களின் வருகை மீண்டும் கட்சியைப் பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இதனால், மம்தாவின் முடிவை எதிர்நோக்கியே பலரும் காத்திருக்கின்றனர்.
பாஜக பதிலடி
பாஜக தலைவர்கள் மீண்டும் திரிணாமுல் கட்சி செல்வது குறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் ஷாமிக் பட்டாச்சார்யா கூறுகையில், "பாஜக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் பலர் எங்கள் கட்சியில் இணைந்தனர். இப்போது அவர்களில் சிலர் மீண்டும் திரிணாமுலுக்கு செல்கின்றனர். மக்கள் இதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். நீங்கள் ஏன் பாஜகவில் இணைந்தீர்கள் என்பதும் மக்களுக்கு தெரியும். ஏன் இப்போது வெளியேறுகிறீர்கள் என்பதும் மக்களுக்கு புரியும்" என்றார்.