பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
பத்தாவது ஐபிஎல் சீசன் தொடரின், பரபரப்பான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி மும்பை அணி வெற்றி
மும்பை: பரபரப்பான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் மோதின.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மணிஷ் பாாண்டே 81 ரன்கள் எடுத்து அவுட்-ஆகாமல் நின்றார்.
இதையடுத்து பேட் செய்த மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தபடி இருந்தது. 18 ஓவர்கள் முடிவில் அந்த அணி 149 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எனவே 12 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அந்த அணி இருந்தது.
ராஜ்புத் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கும், 2வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் நிதிஷ் ராணா. அப்போது 28 பந்துகளில் அவர் 50 ரன்களை தொட்டார். அடுத்த பந்தை வைடாக வீசினார் ராஜ்புத். எனவே 10 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்தது மும்பை. ஆனால் 3வது பந்தில் நரைனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் நிதிஷ் ராணா.
இதையடுத்து சீனியர் வீரர் ஹர்பஜன் களமிறங்கினார். 4வது பந்தில் அவர் சிங்கிள் தட்டினார். 5வது பந்தை எதிர்கொண்ட ஹர்திக் பாண்ட்யா லோ-ஃபுல்டாஸ் பந்தை சிக்சருக்கு விளாசினார். கடைசி பந்தை சிங்கிளுக்கு தட்டினார். ராஜ்புத் ஓவரில் 19 ரன்கள் கிடைத்தன. எனவே கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.
168 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இந்த சேலஞ்சை சந்தித்தது மும்பை. அந்த ஓவரை நியூசிலாந்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான டிரன்ட் பவுல்ட் வீசினார். அவர் முன்னதாக 3 ஓவர்கள் வீசி 37 ரன்களை கொடுத்திருந்தார்.
ஓவரின் முதல் பந்து, ஹர்திக் பாண்டியாவின் கால் காப்பில் பட்டு ஓடியது. 2 ரன்கள் கிடைத்தன. எனவே 5 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில் 2வது பந்தை சந்தித்தார் பாண்ட்யா. அந்த பந்தை பவுண்டரி விளாசினார். 3வது பந்தை பவுன்சராக வீசினார், பவுல்ட். பாண்ட்யா அதை தொட முடியவில்லை. எனவே, ரன் கிடைக்கவில்லை. அடுத்த பந்தில் 2 ரன்கள் கிடைத்தன. 5 வது பந்தில் ஹர்திக் பாண்ட்யா பவுண்டரி விளாச, மும்பை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் கொல்கத்தா வீரர்கள் ஃபீல்டிங் மிஸ் செய்தது, பாண்ட்யாவின் கேட்சை மிஸ் செய்தது போன்ற பெரும் தவறுகளும் அரங்கேறின.
ஏற்கனவே 7 விக்கெட் வித்தியாசத்தில் புனேவிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ் இன்றைய ஆட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.