11 வயதில் எனக்கு இந்தியா மீதான வெறி பிறந்தது.. ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்
மும்பை: 11 வயதில் இருந்தே இந்தியாவை வெறுத்ததாகவும், அங்கு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்த விரும்பியதாகவும் 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் வாக்குமூலம் அளிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி தீவிரவாத வழக்கு ஒன்றில் அமெரிக்க சிறையில் உள்ளார். இந்நிலையில் அவர் அமெரிக்க சிறையில் இருந்து கொண்டே மும்பை வழக்கில் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகின்றார்.
இன்று அவர் மும்பை உயர் நீதிமன்றம் முன்பு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

பள்ளி
நான் பள்ளியில் படிக்கையில் 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள எனது பள்ளி மீது இந்திய விமானங்கள் குண்டு வீசின. இதில் என் பள்ளி சேதமடைந்தது, அங்கு பணியாற்றியவர்கள் உயிர் இழந்தனர்.(அவர் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை குறிப்பிட்டுள்ளார்)

வெறுப்பு
எனக்கு 11 வயது இருக்கையில் நடந்த அந்த சம்பவத்தில் இருந்து நான் இந்தியாவை வெறுக்கத் துவங்கினேன். என் பள்ளி தாக்கப்பட்டதற்கு பழி வாங்க இந்தியாவில் பெரிய அளவில் சேதம் ஏற்படுத்த அப்பொழுதே முடிவு செய்தேன்.

லஷ்கர் இ தொய்பா
என் கண் முன்பு நடந்த தாக்குதலை பார்த்து இந்தியா மீது ஏற்பட்ட வெறுப்பில் தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பில் சேர்ந்தேன். இந்தியாவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடத்தவே அந்த அமைப்பில் சேர்ந்தேன்.

மோசமானவன்
வழக்கறிஞர் ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதால் பொறுமையை இழக்க வேண்டாம் என்று நீதிபதி ஹெட்லியிடம் தெரிவித்தார். அதற்கு அவர் கூறுகையில், நான் ஒன்னும் பொறுமையை இழக்கவில்லை. நான் மோசமானவன். அதை நானே ஒப்புக் கொண்டுள்ளேன். மீண்டும் ஒப்புக் கொள்கிறேன் என்றார். ஹெட்லி நாளையும் தொடர்ந்து வாக்குமூலம் அளிக்கிறார். நாளை காலை 7 மணி முதல் அவர் வாக்குமூலம் அளிக்கிறார்.












Click it and Unblock the Notifications