ராணுவ ஆட்சியின் அடக்குமுறை: மத்திய பாஜக அரசின் தடையை மீறி இந்தியாவில் தஞ்சமடையும் மியான்மர் அகதிகள்
யாங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சியின் அடக்குமுறை உச்சகட்டமாக இருக்கிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் ஜனநாயகவாதிகள் காக்கை குருவிகளைப் போல கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தப்படுகின்றனர். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மியான்மர் மக்கள், அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இந்தியாவுக்கு வருகை தரும் மியான்மர் அகதிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது முதல் அங்கு போராட்டங்கள் வெடித்து வருகின்றன. ஆங்சாங் சூகி உள்ளிட்ட தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் ஜனநாயகவாதிகள் ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து மியான்மர் நாட்டில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் இந்தியா, தாய்லாந்து என பல நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
மியான்மர் எல்லை நிலவரம்
இந்தியாவைப் பொறுத்தவரை மிசோரம், மணிப்பூர், நாகாலந்து, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் பல ஆயிரம் கி.மீ. எல்லையை மியான்மருடன் பகிர்ந்து கொள்கிறது. மணிப்பூரின் மோரே உள்ளிட்ட நகரங்களுக்கு விசா எதுவும் இல்லாமல் மியான்மர் மக்கள் சுதந்திரமாக வந்து செல்லவும் வர்த்தகம் செய்யவும் அனுமதி உண்டு.
மிசோரமில் அதிகம்
மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில் போராட்டங்களும் வெடித்ததால் இந்த எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் மியான்மர் நாட்டு மக்கள் இந்தியாவுக்குள் அகதிகளாக வருவதையும் மத்திய அரசு தடுக்க உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் மியான்மர் அகதிகளைப் பாதுகாக்க வேண்டிய மனிதாபிமான பொறுப்பு எங்களுக்கு உள்ளது என மிசோரம் மாநில முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தார்.
ஒரே மாவட்டத்தில் அதிகம் பேர்
தற்போதைய நிலையில் மிசோரம் மாநிலத்தில் மட்டும் 700க்கும் அதிகமான மியான்மர் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். மிசோரம் மாநிலத்தின் சம்பாய் மாவட்டத்தில் மட்டும் 300க்கும் அதிகமானோர் தஞ்சமடைந்திருக்கின்றனர். இது மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதியாகும்.
மணிப்பூர் எல்லை
இதேபோல் மணிப்பூர் மாநில அரசும் மியான்மர் அகதிகளுக்கு அடைக்கலம் தந்து வருகிறது. இந்திய எல்லை பகுதியான டாமு நகரில் மியான்மர் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள் இந்திய எல்லை நகரமான மோரேவில் தஞ்சமடைந்துள்ளனர். எல்லை கிராம மக்கள் மனிதாபிமானத்துடன் அகதிகளுக்கு அடைக்கலம் தருகின்றனர். அதேநேரத்தில் மியான்மர் அரசின் வேண்டுகோளை ஏற்று சிலர் இந்தியாவில் இருந்து மியான்மருக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இந்தியா நாடு கடத்தும் அச்சம்
அகதிகள் விவகாரத்தில் ஐ.நா. உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடாமல் இருக்கிறது. அதனால் என்னதான் இந்திய மக்கள் அடைக்கலம் கொடுத்தாலும் மத்திய அரசால் தாங்கள் நாடு கடத்தப்படும் நிலை இருக்கிறது என்கிற அச்சத்துடனேயே மியான்மர் அகதிகள் வாழ்ந்தும் வருகின்றனர்.
தாய்லாந்திலும் தஞ்சம்
இதேநிலைதான் மியான்மரின் அண்டைநாடான தாய்லாந்திலும் நிலவுகிறது. தாய்லாந்தும் அகதிகள் தொடர்பான ஐ.நா. உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. இதனால் மியான்மர் அகதிகளை தாய்லாந்தும் நாடு கடத்துமோ என்கிற அச்சம் நிலவுகிறது. தாய்லாந்திலும் ஆயிரக்கணக்கான மியான்மர் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர்.