அருண் ஜேட்லியுடன் சீனிவாசன் திடீர் சந்திப்பு...20 நிமிடம் முக்கியப் பேச்சு!
டெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, இந்தியக் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து கழற்றி விடப்பட்ட சீனிவாசன் திடீரென சந்தித்துப் பேசினார். இருவரும் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் பேசினர்.
டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்தவர் ஜேட்லி. மேலும், கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராகவும் இருந்தவர். அப்போதுதான் கடந்த ஆண்டு ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் மீது மேட்ச் பிக்ஸிங் புகார்களும் எழுந்து ஸ்ரீசாந்த் ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டார்.
சீனிவாசன் தலைவரா் பதவியில் இருந்தபோது அவருடன் இணைந்து செயல்பட்ட நிர்வாகிகளில் ஜேட்லியும் ஒருவர். இந்த நிலையில் ஜேட்லி தற்போது மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் செல்வாக்கை இழந்த சீனிவாசன் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
ஜேட்லியை அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று சந்தித்துப் பேசினார் சீனிவாசன். இது தனிப்பட்ட சந்திப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேசிய விவரம் எதையும் இரு தரப்பும் வெளியிடவில்லை.
ஆனால் ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பான சட்டப் பிரச்சினைகளில் சிக்கியுள்ள சீனிவாசன் அதிலிருந்து மீளுவது தொடர்பாகவே ஜேட்லியைச் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றம், சீனிவாசனை வாரியத் தலைவர் பதவியிலிருந்து கழற்றி ஒதுக்கி வைத்துள்ளது என்பது நினைவிருக்கலாம். ஐபிஎல் போட்டிகளுக்கான இடைக்கால வாரிய்த தலைவராக கவாஸ்கர் செயல்பட்டு வருகிறார்.