மிமிக்ரி பண்ணுவாரு.. ஓடுவாரு.. கேக் சாப்பிடுவாரு + நல்ல காதலர்.. சத்யாவின் மறுபக்கம்!
ஹைதராபாத்: மைக்ரோசாப்ட் நிறுவன புதிய தலைமை செயலதிகாரி சத்யா நாதெல்லாவின் மறுபக்கம் செ்ம சுவாரஸ்யமாக இருக்கிறது.
இத்தாம் பெரிய தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனத்தின் முதல் இந்திய தலைமை செயலதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ள சத்யாவின் மறுபக்கத்தில் அத்தனை சுவாரஸ்யங்கள் புதைந்துள்ளன.
அவரைப் பற்றி அவரது நண்பர்கள் உள்ளிட்டோர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். வாங்க ஒரு ரவுண்டு அடித்து விட்டு வருவோம்...
மகனைப் பற்றி சொல்ல ஒரு வாரம் தேவை...
சத்யாவின் தந்தை சத்யநாராயண நாதெல்லாவிடம் அவரது மகன் குறித்துக் கேட்டபோது, என் மகனைப் பற்றி பேசுவதற்குத் தயாராகவே ஒரு வாரம் தேவைப்படும். அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்றார் சிரித்தபடி.
ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ்
ஹைதராபாத்தின் சொகுசான பணக்காரர்கள் வாழும் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில்தான் சத்யாவின் பெற்றோர் வசிக்கின்றனர். ஆனால் யாருக்குமே இவர்கள்தான் சத்யாவின் பெற்றோர் என்றே தெரியாது. அந்த அளவுக்கு எளிமையான முறையில் பல காலமாக இங்கு இவர்கள் வசித்து வருகிறார்கள்.
மாமனாரின் மகா அடக்கம்
இவர்களை விட சத்யாவின் மாமனார் கே.ஆர்.வேணுகோபால் இன்னும் அடக்கமாக இருக்கிறார். தனது மருமகனின் உயர்வைப் பெரிதாக பீற்றிக் கொள்ளவோ, கொண்டாட்டங்களில் ஈடுபடவோ அவர் விரும்பவில்லை. மாறாக இதை பெரிதாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. அவரது திறமைக்குக் கிடைத்த பரிசு இது. மாபெரும் செய்தி. அதேசமயம், இதை பறை சாற்றிக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை என்றார்.
பள்ளிப் பருவத்திலேயே முகிழ்த்த காதல்
சத்யா பள்ளியில் படித்தபோதே அவருக்குக் காதல் வந்து விட்டது. அவர் காதலித்த பெண்ணின் பெயர் அனுபமா. இவரது தந்தையும், சத்யாவின் தந்தையும் நண்பர்கள். இருவரின் தந்தையும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர்.
மங்களூரில் வளர்ந்து தொடர்ந்த காதல்
பின்னர் சத்யாவும், அனுபமாவும் மங்களூர் மணிபால் பல்கலைக்கழகத்தில் படித்தபோது இருவரும் காதலும் கூடவே சேர்ந்து வளர்ந்தது.
இப்போது தம்பதிகள்
இந்தக் காதலர்கள் பின்னர் திருமண வாழ்க்கையில் புகுந்தனர். இப்போது 22 வருடமாகி விட்டதாம் இருவரும் மணம் புரிந்து. அதாவது சத்யா மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்த வருடத்தில்தான் இவர்களது திருமணமும் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.
அப்பா - மாமனாரின் ஒற்றுமை
சத்யாவின் தந்தையும், அனுபமாவின் தந்தையும் ஒரு வித்தியாசமான ஒற்றுமையைக் கொண்டவர்கள். அதாவது இருவருமே, மறைந்த பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அவருக்குக் கீழ் பணியாற்றியவர்களாம்.
அப்பா திட்டக் கமிஷனில்...
சத்யாவின் தந்தை திட்டக் கமிஷன் உறுப்பினராக இருந்தவர். மாமனார் வேணுகோபால், மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ஆர். கொண்டு வந்த 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். இருவருமே ஏழைகளுக்கான திட்டங்களுக்காக பாடுபட்டவர்கள் என்கிறார்கள்.
ஸ்கூல் கேன்டீன் என்றால் பிடிக்கும்
ஹைதராபாத்துக்கு வரும்போதெல்லாம் தான் படித்த ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலுக்குத் தவறாமல் போய் விடுவாராம் சத்யா. அங்குள்ள கேன்டீனுக்குப் போய் அவ்வளவு விருப்பமாக சாப்பிடுவாராம். தனது ஸ்டேட்டஸ் குறித்தெல்லாம் கவலையே பட மாட்டாராம்.
கேக் என்றால் இஷ்டம்
அவருக்கு மிட்டாய், கேக், இனிப்பு என்றால் இஷ்டமாம். விரும்பிச் சாப்பிடுவாராம்.
சிக்கென்றும் இருப்பார்
ஸ்வீட்ஸ், கேக் போன்றவற்றை விழுந்து விழுந்து சாப்பிட்டாலும் கூட ஆள் பார்க்க சிக்கென்றுதான் இருப்பாராம். காரணம், அவர் தினசரி மறக்காமல் ஜாகிங் போவதால். இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்.
மிமிக்ரி சூப்பரா பண்ணுவாப்ல...!
சத்யாவுக்கு மிமிக்ரி சூப்பராக வருமாம். ஒருமுறை ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலுக்கு வந்திருந்தபோது அவர் மிமிக்ரியெல்லாம் செய்து அசத்தினாராம்.
தான் படித்த பள்ளிக்காக பல விஷயங்களைச் செய்துள்ள சத்யா, அந்த ஸ்கூல் மாணவர்களுக்காக மைக்ரோசாப்ட்டின் சாப்ட்வேர் தொழில்நுட்ப உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.