ஏன் 22 வகை தகவல்களை பயனாளர்களிடம் கேட்கிறது? - சந்தேகம் கிளப்பும் நமோ 'ஆப்' செயல்பாடு
22 வசதிகளை இயக்க அனுமதி கேட்கும் நமோ ஆப் மூலம் இந்தியர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Recommended Video
டெல்லி : நமோ ஆப் என்கிற ஆண்ட்ராய்ட் செயலி 22 வசதிகளை இயக்குவதற்கு அனுமதி கேட்பதன் மூலம், அந்த ஆப் வைத்திருப்பவர்களின் அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களின் தகவல்களைத் திரட்டி கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்கிற நிறுவனத்திற்கு வழங்கி அமெரிக்கத் தேர்தல் ட்ரம்ப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டது என்கிற குற்றச்சாட்டை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் உருவாக்கப்பட்ட நமோ ஆப் தற்போதுசர்ச்சையில் சிக்கியுள்ளது.
பிரதமர் மோடிக்கு, இ-மெயில் அனுப்பவும், அதற்கு உடனடியாக பதில் தகவல் பெறவும் வசதியாக, 'நமோ ஆப்' என்கிற செயலி சேவை தொடங்கப்பட்டது. இந்த ஆப்பை பொதுமக்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
பிரதமருக்கு நேரடி இ மெயில்
இதைப்பயன்படுத்தி நேரடியாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் பெற முடியும் என்றும், பல்வேறு நலத்திட்டங்களுக்கு இந்த செயலி பெரிதளவில் உதவிகரமாக இருக்கும் என்றும், முக்கிய நிகழ்வுகள் மற்றும் நாட்டு நடப்புகள் என அனைத்தையும் எளிதில் அறிந்து கொள்ள முடியும் என்று மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தெரிவித்திருந்தது.
22 வசதிகளைப் பயன்படுத்த அனுமதி
ஆனால் தற்போது அந்த செயலி மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆப் தரவிறக்கினால், பயனாளர்கள் போனில் இருக்கும் 22 வசதிகளைப் பயன்படுத்த அனுமதி கேட்பதாகவும், வேறு எந்த அரசு மற்றும் தனியார் ஆப்பிலும் இல்லாத அளவிற்கு அனுமதி கேட்கப்படுவதில்லை என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது.பயனாளர் இருக்கும் இடம், அவரது அந்தரங்க தகவல்களை பார்க்கும் வசதி, போனில் பதியப்பட்டிருக்கும் எண்களை கையாளுதல் என 22 வசதிகளைப் பயன்படுத்த அனுமதி கேட்பதன் மூலம் பல முக்கியத் தகவல்களை இந்த செயலி மூலம் திருடமுடியும் என்று மென்பொருள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தரங்க தகவல்கள் விற்பனை
மேலும் ஹேக்கர் ஒருவர் இந்த ஆப் குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டில், இந்த செயலியை பயன்படுத்தும் நபர்களின் பெயர், புகைப்படம், பாலினம் போன்ற ரகசிய குறிப்புகள் அனைத்தும் அவர்களின் சம்மதம் இல்லாமலேயே http:n.wzrkt.com என்னும் மையதளத்தை சென்றடைவதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்த தகவல்கள் அனைத்தும் பயனாளர்களின் அனுமதி இல்லாமல் விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவையில்லாத குற்றச்சாட்டு
ஆனால், இந்த குற்றசாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. இதுகுறித்த சந்தேகங்களுக்கு பாஜக தகவல் தொடர்பு நிர்வாகி அமித் மால்வியா தெரிவிக்கையில், நமோ ஆப் குறித்து பலர் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். நமோ ஆப் மூலம் பெறப்படும் தகவல்கள் யாவும் மூன்றாம் தரப்பு பகுப்பாய்வுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், தகவல் திருட்டு போன்ற செயல்களில் பாஜக எப்போதும் ஈடுபடாது எனவும் தெரிவித்துள்ளது.