மத்திய அமைச்சர் கனவில் நாகாலாந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நெய்பியூ ஏமாற்றம்!!
டெல்லி: நரேந்திர மோடியுடன் மத்திய அமைச்சராக பதவியேற்கப் போகிறோம் என்கிற கனவில் நாகாலாந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நெய்பியூ ரியோ ஏமாற்றமடைந்து போயுள்ளார்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நெய்பியூ ரியோவின் நாகா மக்கள் முன்னணி இடம்பெற்றுள்ளது. இந்த கட்சி 1 இடத்தை கைப்பற்றியது. இக் கட்சி சார்பில் போட்டியிட்ட நெய்பியூ ரியோ 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
மேலும் நெய்பியூ ரியோவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று உறுதியும் அளிக்கப்பட்டது. இதனால் தமது நாகாலாந்து முதல்வர் பதவியை நெய்பியூ ரியோ ராஜினாமா செய்தார். அம்மாநிலத்தின் புதிய முதல்வராக ஜிலியாங் பதவியேற்றும் கொண்டார்.
இந்நிலையில் நேற்று மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்றனர். ஆனால் நெய்பியூ ரியோ அமைச்சராக்கப்படவில்லை. இதனால் அவர் கடும் விரக்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.