இந்தியாவுக்கு எதிராக பிரதமர் 'ஒலி' செய்த வேலை.. நேபாளத்தில் கலைந்த ஆட்சி.. 2ஆக உடைந்த கட்சி!
காத்மாண்டு: நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமயில் ஒரு அணியும், கட்சியின் நிர்வாகக்குழு தலைவரான பிரசண்டா தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்துள்ளன. இரு அணிகளும் தனித்தனியா மத்திய குழு கூட்டங்களை நடத்தி உள்ளன. இரு அணிகளும் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்ற தீவிரமான வேலைகளில் இறங்கி உள்ளன.
நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இரு மூத்த தலைவர்களான பிரதமர் ஒலிக்கும், முன்னாள் பிரதமரும் கட்சியின் நிர்வாகக்குழு தலைவரான பிரசண்டாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் அதிகார மோதல் ஏற்பட்டது.
இதன் காரணமாக நேபாள நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடுமாறு பிரதமர் கே.பி.சர்மா ஒலி, அந்நாட்டு அதிபருக்கு அண்மையில் பரிந்துரை செய்தார்.
பிரதமர் ஒலி திட்டம்
இந்நிலையில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, கட்சிக்கு 1,199 உறுப்பினர்களைக் கொண்ட புதிய குழுவை அறிவித்துள்ளதுடன் கட்சியின் பொதுகுழுவை கூட்ட செய்வதற்காக தனது பிடியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளார். பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான பலுவதாரில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பிரதமர் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இதற்கிடையே கட்சியின் புதிய செய்தித் தொடர்பாளராக நிலைக்குழு உறுப்பினரான வெளியுறவு அமைச்சர் பிரதீப் கியாவாலி நியமிக்கப்பட்டுள்ளார். தனது பிரிவின் மத்திய குழு உறுப்பினர்களை உரையாற்றிய ஒலி, கட்சியின் பொது மாநாட்டை நவம்பர் 18-23 தேதிகளில் காத்மாண்டுவில் அடுத்த ஆண்டு நடத்த முன்மொழிந்தார். முன்னதாக கட்சியின் மாநாடு 2021 ஏப்ரல் 7 முதல் 12 வரை திட்டமிடப்பட்டது.
பிரசண்டா பிரிவு
இதனிடையே பிரசண்டா தலைமையிலான போட்டி பிரிவும் காத்மாண்டுவில் தனி மத்திய குழு கூட்டத்தை நடத்தியது. முன்னாள் பிரதமர்கள் மாதவ் குமார் முன்னாள் விவசாய அமைச்சர் கானாஷ்யம் பூஷல் ஆகியோர் பிரச்சந்தா தலைமையிலான பிரிவின் மத்திய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த தலைவர்கள் ஆவர். கட்சியின் மத்திய குழுவின் 446 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பிரசண்டா தலைமையிலான பிரிவு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இரு பிரிவுகள்
தற்போதைய நிலையில் , கட்சியில் பிளவு ஏற்பட்டது இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு பிரிவுகளும் தேர்தல் சின்னத்துடன் அதிகாரப்பூர்வ கட்சி அங்கீகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இரு பிரிவுகளும் இப்போது கட்சியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான உத்திகளை உருவாக்குவதில் மும்முரமாக உள்ளன.
நாடாளுமன்றம் கலைப்பு‘
கட்சி ஒழுக்கத்தை மீறியதற்காக பிரதமர் ஒலி மீது நடவடிக்கை எடுக்க கட்சியின் நிலைக்குழு முடிவு எடுத்திருப்பதாக பிரசாண்டா தலைமையிலான பிரிவு தேர்தல் ஆணையத்தில் தெரிவித்தது. இதனால் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளான பிளவு தனது அரசாங்கத்தின் செயல்பாட்டை கடுமையாக பாதித்ததால், பாராளுமன்றத்தை திடீரென கலைப்பதாக ஒலி அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக
2017-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (என்சிபி) ஆட்சிக்கு வந்தது. அந்த கட்சிக்கு 275 உறுப்பினர்கள் உள்ளனர். ஒலி பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், இந்தியாவின் எல்லைப் பகுதியை இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுடன் மோதல் போக்கை பிரதமர் ஒலி கடைப்பிடித்து சீனாவுடன் நெருக்கம் காட்டினார். ஆனால், பிரதமர் ஒலியின் இந்தச் செயலை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கண்டித்தது
குற்றச்சாட்டு
இதனால், என்சிபி கட்சியின் கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் பிரசண்டாவுக்கும், பிரதமர் ஒலிக்கும் இடையே கூட்டத்தில் நேரடியாக மோதல் வெடித்தது. இதையடுத்து, சிலர் அண்டை நாட்டின் உதவியுடன் என் ஆட்சியைக் கலைக்கத் திட்டமிடுகிறார்கள் என்று பிரசண்டா மீது பிரதமர் ஒலி வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவத்துக்குப் பின்னரே மோதல் அதிகரித்து இப்போது நாடாளுமன்றத்தை கலைத்து கட்சியும் பிளவு பட்டுள்ளது.