புதிய ரூ.10 நாணயங்கள்... புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு
இந்தியாவின் தேசிய ஆவண காப்பகத்தின் (என்ஆர்பி) 125-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.10 நாணயங்களை புழக்கத்தில் விடுகிறது.
டெல்லி: இந்தியாவின் தேசிய ஆவண காப்பகத்தின் 125-ஆவது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.10 நாணயங்களை புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளது.
இந்த நாணயத்தின் மத்தியில் அசோகா தூணில் சிங்க முகமும், அதற்கு கீழ் சத்யமேவ ஜெயதே ('வாய்மையே வெல்லும்') என்ற வாசகங்கள் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் இடப்பக்கம் 'பாரத்' என்று தேவநாகரியிலும், வலது பக்கம் 'இந்தியா' என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.
சிங்கமுகத்தின் கீழ் பகுதியில் ரூபாயை குறிக்கும் குறியீடும், மதிப்பிலக்கம் 10 என்பது எண்ணிலும், நாணயத்தின் மறுபக்கம் தேசிய ஆவண காப்பக கட்டடத்தின் உருவப்படம் மத்தியிலும், உருவப்படத்தின் கீழே '125' என்று ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.
தேசிய ஆவண காப்பக கட்டட உருவப்படத்திற்கு மேற்புறம் 'இந்திய தேசிய ஆவண காப்பகம்' என்று தேவநாகரியிலும், கீழ்புறத்தில் தேசிய ஆவண காப்பகம் என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். மேலும், உருவப்படத்தின் இடது மற்றும் வலதுபுறம் முறையே மேல்பக்கத்தில் '1891' மற்றும் '2016' என்று ஆண்டு, எண்களில் பொறிக்கப்பட்டிருக்கும்.
அதற்காக தற்போது உள்ள ரூ.10 நாணயங்கள் செல்லாது என்ற பீதி அடைய வேண்டாம் என்று ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.