கே.ஆர். நாராயணனும்.. ராம்நாத்தும் ஒன்னா.. தலித் என்பதால் ஆதரிக்க முடியாது.. திருமாவளவன் காட்டம்
முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனும் பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தும் ஒன்றா என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ள ராம்நாத் கோவிந்த்தும் முன்னாள் ஜனாதிபதி மறைந்த கே.ஆர். நாராயணனும் ஒன்றா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:
பாஜகவின் சவால்
பாஜகவின் தலித் ஆதரவு நிலைப்பாடு என்பது தலித் மேம்பாட்டுக்கானதாக உணர முடியவில்லை. பெரும்பான்மையான தலித்துகள் நாடு தழுவிய அளவில் தொடர்ந்து மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும், பாஜகவிற்கு எதிராக வாக்களிக்கிறார்கள் என்பதும் பாஜகவிற்கு ஒரு சவாலாக இருக்கிறது.
பொது வேட்பாளர்
ஆகவே, பாஜகவின் செயல்திட்டம் தலித் மக்களை நோக்கியதாக இருக்கிறது என்பதை உணர்ந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் விசிக சார்பில் வேண்டுகோள் விடுத்தோம். பாஜகவின் சதி முயற்சிக்கு இறையாகிவிடாமல், பாஜக அல்லாத பிற அனைத்து மதசார்ப்பற்ற சக்திகளும் கட்சிகளும் இணைந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.
விசிக வருத்தம்
எதிர்ப்பார்த்ததைப் போன்று தலித் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. அவர் தலித் என்பதால் விசிக மகிழ்ச்சி அடைய ஒன்றுமில்லை. பாஜக முதன் முதலாக இந்த முடிவை எடுத்ததாக சொல்ல முடியாது.
இருவரும் ஒன்றா?
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கே.ஆர். நாராயணனை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து 5 ஆண்டுகாலம் பதவி வகித்தார். அவரையும் பாஜக அறிவித்துள்ள ராம்நாத் கோவிந்த்தையும் சமமாக பார்க்க முடியாது.
ஆர்.எஸ்.எஸ்.காரர் ராம்நாத்
இருவரும் தலித்துகளாக இருக்கலாம். அவர் காங்கிரஸ் கட்சி, இவர் பாஜகவை சேர்ந்தவர். ஆனால், கே.ஆர். நாராயணன் அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கியவர். ஆனால் ராம்நாத் கோவிந்த் அப்படிபட்டவர் அல்ல. அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கச் சிந்தனையாளர். ஆகவே, இருவரின் சிந்தனைக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்.
விசிக வேண்டுகோள்
இந்நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள். பாஜக உள்நோக்கத்தோடு எதிர்க்கால செயல்திட்டங்களை நடைமுறை படுத்தும் வகையில் இந்த வேட்பாளரை அறிவித்துள்ளது. ஆகவே, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து மிக கவனமாக இதை கையாள வேண்டும். புரட்சிகர ஜனநாயக சிந்தனையுள்ள தலித் ஒருவரை எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும்.