லோதா கமிட்டி பரிந்துரையை ஏற்காவிட்டால், பணத்தை தொட முடியாது: பிசிசிஐக்கு சுப்ரீம் கோர்ட் 'செக்'
டெல்லி: லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தாதவரையில், மாநில கிரிக்கெட் சங்கங்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த கூடாது என்றும், பிசிசிஐயும், புதிதாக நிதி ஒதுக்க கூடாது என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பிசிசிஐயின் நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான குழு அளிக்கப்பட்டது. இந்தக்குழு தனது பரிந்துரைகளை சமீபத்தில் அளித்தது. ஆனால், இந்த பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பு தெரிவிப்பதாக பிசிசிஐ மீது குற்றம் சாட்டி கடந்த சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் லோதா குழு அறிக்கை அளித்தது.
சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று வழக்கு விசாரிக்கப்பட்டது. லோதா கமிட்டி சார்பில் கோபால் சுப்பிரமணியமும், பிசிசிஐ சார்பில் கபில் சிபலும் வாதிட்டனர்.
நீதிபதி தாக்கூர் கூறுகையில், லோதா கமிட்டி சாதாரண ஒரு குழு கிடையாது. அது, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு. பிசிசிஐக்கு சந்தேகம் இருந்தால் அந்த குழுவிடம்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். லோதா கமிட்டி பரிந்துரைக்கு எதிராக பல மாநில கிரிக்கெட் சங்கங்கள் வாக்களித்துள்ளன.
இவ்வாறு வாக்களித்த சங்கங்கள் பிசிசிஐ மூலம் கிடைத்த நிதியை திருப்பி வழங்க வேண்டும். இனிமேலும், அந்த சங்கங்களுக்கு நிதி ஒதுக்கப்பட கூடாது. அல்லது, லோதா கமிட்டி பரிந்துரைக்கு அனைத்து சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறிய நீதிபதி, லோதா கமிட்டி பரிந்துரைகளை அப்படியே ஏற்க தயாரா என கபில் சிபலை பார்த்து கேட்டார். ஆனால் அடம் பிடிக்கும் பிசிசிஐயின் வழக்கறிஞரான கபில் சிபலோ, அப்படி ஒப்புக்கொள்ள முடியாது என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில் நாளை (வெள்ளிக்கிழமை) சுப்ரீம்கோர்ட் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என நீதிபதிகள் கூறி, வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தனர். வழக்கு மதியம் 2 மணிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென வழக்கு இம்மாதம் 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதனிடையே, சில அதிரடி உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்படி, லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்காதவரை, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு, பிசிசிஐ நிதி வழங்க முடியாது என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பிசிசிஐயிடமிருந்து நிதியை பெற்ற 13 மாநில சங்கங்களும், அந்த நிதியை பயன்படுத்த கூடாது. லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவோம் என உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த பிறகுதான், நிதியை பயன்படுத்த முடியும், எனவும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
மேலும் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் லோதா கமிட்டி பரிந்துரை குறித்து மேற்கொண்ட உரையாடல்களை, தனிப்பட்ட முறையில், சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் வழக்கு வரும், 17ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.