பாலிவுட் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்... நடிகர் சஞ்சய் தத்துக்கு பிடிவாரண்ட்
கொலை மிரட்டல் வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மும்பை: பாலிவுட் தயாரிப்பாளர் ஷகில் நூரானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு ஜான் கி பாஸி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக சஞ்சய் தத்துக்கு ரூ. 50 லட்சம் முன்பணம் கொடுத்திருந்தார் தயாரிப்பாளர் ஷகில் . ஆனால் சில காரணங்களுக்காக அந்த படத்தில் இருந்து சஞ்சய் தத் விலகி விட்டார்.
அவரிடம் கொடுத்த முன் பணத்தை கேட்ட போது பணத்தை திருப்பி தராததோடு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் ஷகில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சஞ்சய் தத் ரூ. 2 கோடி தர வேண்டும் என உத்தரவிட்டது. அதையும் அவர் ஏற்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம் சஞ்சய் தத்தை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இரண்டு முறை உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் தத்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் சஞ்சய் தத் தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் ஆஜராகி ரூ. 10 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற்றார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்ற நிலையில்அவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சஞ்சய் தத் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.