ரஷ்யா பற்றிய பேச்சை ஒபாமா தவிர்த்திருந்திருக்கலாம்
டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா டெல்லியில் ரஷ்யா, உக்ரைன் விவகாரம் பற்றி பேசியது இந்தியாவை வியப்படைய வைத்துள்ளது. அது அமெரிக்க பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு ஒபாமா அளித்த பதில் என்பதால் அதை பலரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்தியா, அமெரிக்கா உறவு பற்றி பேச வந்த இடத்தில் ஒபாமா ரஷ்யா, உக்ரைன் பிரச்சனை பற்றி பேசாமல் இருந்திருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஒபாமா என்ன கூறினார்?
ரஷ்யா வலுவிழந்துவிட்டது என்றோ, அதன் பொருளாதாரம் சிதைந்துவிட்டது என்றோ நாங்கள் நினைக்கவில்லை என்பதை தான் நான் பலமுறை கூறி வருகிறேன். பெரிய நாடுகள் சிறிய நாடுகளிடம் வம்பு இழுக்கக் கூடாது என்ற கொள்கையை எடுத்துரைப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அடுத்த நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையில் பிற நாடுகள் தலையிடக் கூடாது. அது தான் தற்போது உக்ரைனில் பிரச்சனையாக உள்ளது.
இந்த விவகாரத்தில் ரஷ்யாவுடன் ராணுவ பிரச்சனையில் ஈடுபட விரும்பவில்லை. அதே சமயம் உக்ரைன் தனது எல்லையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தொடர்ந்து உதவி செய்வோம். உக்ரைனில் உள்ள போராளிகளுக்கு ரஷ்யா ஆதரவு அளிப்பதுடன் ஆயுதங்கள், நிதி மற்றும் பயிற்சியும் அளிக்கிறது.
தவிர்த்திருந்திருக்கலாம்
இருநாட்டு உறவு பற்றி பேச வந்த இடத்தில் வேறு நாட்டு பிரச்சனை பற்றி பேசியதை ஒபாமா தவிர்த்திருந்திருக்கலாம் என்று ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சி.டி. சஹாய் ஒன்இந்தியாவிடம் தெரிவித்தார். அமெரிக்க பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டதால் தான் ஒபாமா அது பற்றி பேசினார் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் தெரிவித்தார்.
அந்த பத்திரிக்கையாளரிடம் இங்கு இது குறித்து பேச வேண்டாம் என்று ஒபாமா தெரிவித்திருந்திருக்கலாம். உக்ரைன் பிரச்சனை ஒன்றும் புதிதும் அல்ல, அண்மையில் ஏற்பட்டதும் அல்ல. மாதக் கணக்கில் அந்த பிரச்சனை உள்ளது.
போர் அல்லது போர் போன்ற நிலையை ரஷ்யாவில் தவிர்க்கலாம் என்று ஒபாமா கூறியது ஆறுதலான விஷயம் என்றார் சஹாய்.
இந்தியா
இரு நாட்டு தலைவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உள்ள நல்ல விஷயங்களை இந்த ரஷ்ய பிரச்சனை மறைத்துவிடக் கூடாது என்பதே இந்தியாவின் கவலை. வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் கூறுகையில், அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தான் ஒபாமா பதில் அளித்தார் என்றார்.
பாகிஸ்தான்
தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரம் காட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சஹாய் தெரிவித்தார். பாகிஸ்தான் விவகாரத்தில் இனி இந்தியா அமெரிக்காவை பற்றி புகார் கூற முடியாது.
பாகிஸ்தான் இனியாவது தீவிரவாதத்திற்கு எதிராக போராட வேண்டும். இது தான் இந்தியா-அமெரிக்கா இடையே நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட தகவல் என்று தான் நினைப்பதாக சஹாய் மேலும் தெரிவித்தார்.