தமிழகம் பாணியில் பொறியியல், மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவருக்கு 15% இடஒதுக்கீடு-ஒடிஷா அதிரடி
புவனேஸ்வர்: பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தீர்மானம் ஒடிஷா சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒடிஷாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மேற்படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆராய ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது.
இப்பரிந்துரைகளின் அடிப்படையில் மாநில சட்டசபையில் முதல்வர் நவீன் பட்நாயக், 15% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.
முன்னதாக இந்த இடஒதுக்கீட்டு பரிந்துரைக்கு ஒடிஷா மாநில அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. இம்மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்னர் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்படும்.
தமிழகத்தில் 1996-ல் கிராமப்புற மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15% இட ஒதுக்கீடு கிடைக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார். 2001-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இதை 25 சதவீதமாக உயர்த்தினார். பின்னர் நீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்தது.
அண்மையில் மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி நடைமுறைப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.