ஒடிஷா: பூரி ஜெகன்னாதர் கோயிலின் 'கடைசி தேவதாசி' 92 வயதில் மரணம்!
பூரி: இந்திய சமூக அமைப்பின் பேரவலமாக கருதப்படுகிற பெண்ணடிமைத்தனத்தின் உச்சமானதுதான் தேவதாசி முறை... ஒடிஷாவின் பூரி ஜெகன்னாதர் கோயிலில் இந்த கொடூர தேவதாசி முறையின் உயிர்ப்புமிக்க கடைசி சாட்சியமாக இருந்த சஷிமாணி என்ற 92 வயது மூதாட்டி நேற்று காலமானார்.
மன்னராட்சிக் காலங்களில் கடவுள்களுக்கு 'நேர்ந்து விடப்பட்ட' பெண்கள்தான் தேவரடியார்கள் என்கிற தேவதாசிகள்.. ஒரு குறிப்பிட்ட சமூகத்து பெண்கள்தான் இப்படி தேவரடியார்கள் அல்லது தேவதாசிகளாக நேர்ந்துவிடப்பட்டனர். அவர்களது பணி கோயிலில் நடனமாடுவது மட்டுமின்றி செல்வந்தர்களின் இச்சைகளைத் தீர்ப்பதுமாகும்..
திராவிடர் இயக்கம் எழுச்சி பெற்றதால் தமிழ்நாட்டில் இந்த தேவதாசி முறை ஒழித்துக் கட்டப்பட்டது. இதில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்டோரின் பங்கு முதன்மையானது. தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்கள் என்ற தலைப்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் எழுதி 1936ஆம் ஆண்டு வெளிவந்த நாவல் தேவதாசிகளின் அவலநிலையை அம்லப்படுத்தி சமூகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இந்தியாவின் பிற பகுதிகளிலும் ஆச்சார அனுஷ்டான ஆலயங்களில் இந்த தேவதாசி முறை கடைபிடிக்கப்பட்டாலும் நாடு விடுதலை அடைந்த பின்னர் மெது மெதுவாக இந்த தேவதாசி முறை இல்லாது போனது. ஆந்திரா மாநிலத்தில் ஒரு சில கிராமங்களில் இன்றளவும் இந்த தேவதாசி முறை 'ஆண்டவனின்' பெயரால் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் புகழ்பெற்ற பூரி ஜெகன்னாதர் கோயிலில் தேவதாசியாக இருந்த 92 வயது மூதாட்டி சஷிமாணி தேவி நேற்று காலமானார். பூரி கோயிலைப் பொறுத்தவரையில் இவர்தான் கடைசி தேவதாசி ஆவார்.
சுமார் 68 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயிலின் தேவதாசியாக இணைந்தார் சஷிமாணி. கோயிலின் முக்கிய நாட்களில் கடவுள் முன் நடனம் ஆடுவதும், கீதையை இசைப்பதும் இவரது கடமையாக இருந்து வந்தது.
வயது முதிர்ந்த நிலையில் தனது வளர்ப்பு மகனுடன் வசித்து வந்த சஷிமாணி 92வது வயதில் நேற்று காலமானார். இதன் மூலம் பூரி ஜெகன்னாதர் கோயிலில் தேவதாசி முறையின் அடையாளம் முடிவுக்கு வந்துவிட்டது.