நிச்சயம் ஒருநாள் தெலுங்கு மக்கள் மீண்டும் ஒன்றிணைவார்கள்: கிரண்குமார் நம்பிக்கை
விஜயவாடா: நிச்சயமாக தெலுங்கு மக்கள் மீண்டும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்துள்ளார் ஜெய் சமைக்யாந்திரா கட்சி தலைவரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான கிரண் குமார் ரெட்டி.
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப் படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி. அதன் தொடர்ச்சியாக ஜெய் சமைக்யாந்திரா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கிறார் கிரண்குமார் ரெட்டி. அவரது கட்சியின் சின்னமாக செருப்பு ஒதுக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயவாடாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கிரண்குமார் ரெட்டி. அப்போது அவர் பேசியதாவது :-
தெலுங்கு மக்கள் மீண்டும் ஒருநாள் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களின் உரிமைக்காக போராடவுமே புதிய கட்சி தொடங்கியிருக்கிறேன்.
மேலும், காங்கிரஸ் பாரதீய ஜனதா, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள்தான் ஆந்திர பிரிவினைக்கு காரணம். ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா மசோதா நிராகரிக்கபட்ட நிலையிலும் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.