பலத்த பாதுகாப்புடன் பதன்கோட் வந்த பாக். விசாரணைக் குழு.. தீவிரவாதிகள் தாக்கிய பகுதியில் ஆய்வு
சண்டிகர்: தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்தில் பாகிஸ்தான் கூட்டு விசாரணை குழு பரிசீலனை நடத்திவருகிறது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை மீறி மத்திய அரசு இக்குழு வருகைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமித்ரசரஸ் ஏர்போர்ட்டிற்கு வந்து இறங்கிய பாகிஸ்தான் டீம், அங்கிருந்து குண்டு துளைக்காத எஸ்.யூ.வி வாகனங்கள் மூலம், பதன்கோட் அழைத்து வரப்பட்டது.
பஞ்சாப் தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் முகமது தாகிர் தலைமையிலான இக்குழுவில் லாகூர் புலனாய்வு பிரிவு துணை இயக்குநர் முமகது ஆசிம் அர்ஷத், ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் லெப்டினன்ட் கர்னல் தன்வீர் அகமது, ராணுவ புலனாய்வு பிரிவு லெப்டினன்ட் கர்னல் இர்பான் மிர்சா, குஜ்ரன்வாலா விசாரணை அதிகாரி ஷாகித் தன்வீர் ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தீவிரவாதிகள் தங்கியிருந்த கட்டிடம், தீவிரவாதிகள் நுழைந்த பகுதி, அவர்கள் தாக்குதல் நடத்திய பகுதிகளை மட்டும் பாகிஸ்தான் குழுவிற்கு காண்பிக்க உள்ளது இந்திய தரப்பு. அதேநேரம், ரகசிய பகுதிகளை காண்பிக்க கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. எனவே, பாகிஸ்தான் குழுவின் பார்வையை மறைப்பதற்காக முக்கிய பகுதிகளில் பெரிய ஸ்கிரீன்களை அமைத்துள்ளனர்.