நீதித்துறை செயல்பாடுகளில் நாடாளுமன்றம் தலையிட கூடாது: தலைமை நீதிபதி லோதா பரபரப்பு பேச்சு!
டெல்லி: நீதிமன்ற செயல்பாடுகளில் நாடாளுமன்றம் தலையிட கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்,லோதா தெரிவித்தார். நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறையை மத்திய அரசு
மாற்றியுள்ள நிலையில் லோதா இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தினத்தை, முன்னிட்டு டெல்லியில் இன்று உச்சநீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து லோதா பேசியதாவது:
நீதித்துறை, அரசு துறை, நாடாளுமன்றங்களில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை அளித்துக்கொள்ளும் வகையில் முதிர்ச்சி அடைந்தவர்கள் என்று நான் நம்புகிறேன்.
இவர்கள் தங்களுக்குள் எந்த இடையூறும் இல்லாமல் பணியாற்ற அனுமதிப்பார்கள் என்று நம்புகிறேன். அரசியல் சாசனத்திலும் இது நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது" என்றார்.
உச்சநீதிமன்ற மற்றும் ஹோகோர்ட் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறையை மாற்றிவிட்டு நீதிபதிகளை நியமிக்க ஆணையம் அமைக்கும் வகையிலான சட்டத்தை லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
ஏற்கனவே உள்ள கொலிஜியம் முறையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அதிக அதிகாரம் இருந்தது. எனவே அந்த முறையே தொடர வேண்டும் என்று லோதா தெரிவித்திருந்தார். கொலிஜியம் முறையை ஒழிக்க வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட பொது நல மனுவையும் லோதா தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் கடந்த வாரம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளதால் லோதா அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது இன்றைய கருத்தும் இதை மெய்ப்பிப்பதாக உள்ளது.