இங்கிலாந்தில் மூன்று நாள் பயணம்.. லண்டன் சென்றடைந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி 3 நாள் பயணமாக இன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்று சேர்ந்தார். இங்கிலாந்தில் அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று சிறப்பு விமானத்தில் புறப்பட்ட மோடி, இந்திய நேரப்படி மாலையில், லண்டன் சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்திய நேரப்படி இன்று இரவு, பிரிட்டீஷ் பிரதமர், டேவிட் கேமரூன், மோடிக்கு ராணுவ வரவேற்பு அளிக்கிறார். பிறகு இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றுகிறார்.
நாளை, லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி 2ம் எலிசபெத், பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளித்து கவுரவிக்கிறார். பின்னர் வெம்லே மைதானத்தில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பேசுகிறார். இதில் 60 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரூனுடனான சந்திப்பின்போது, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெறுகிறது. மேலும் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரு தலைவர்களும் கூட்டாக அறிக்கையும் வெளியிடுவார்கள் என வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது, லண்டனில் கடந்த 1921-22ம் ஆண்டுகளில் அம்பேத்கர் வசித்த பகுதியையும் அவர் பார்வையிடுகிறார்.
பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு முதல் முறையாக மோடி மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் இதுவாகும். முந்தைய பயணங்களின்போது முந்தைய காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்ததால் உள்நாட்டில் மோடி அதிருப்தியை சம்பாதித்தார். எனவே, இம்முறை அவரின் செயல்பாடுகள் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.