தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் உள்ளதாம்... பிரதமர் மோடி சரமாரி குற்றச்சாட்டு
தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
Recommended Video
டெல்லி: தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் உள்ளதை நான் மட்டுமல்ல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கூறியிருந்தார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இ மெயில் மூலம் தினத்தந்தி நாளிதழ் அனுப்பிய கேள்விகளுக்கு அவர் அனுப்பிய பதில்களை பார்ப்போம். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருக்கிறது என்று கூறியுள்ளாரே இது குறித்து உங்கள் கருத்து என்ன.
இதற்கு மோடி பதிலளிக்கையில் உலகம் முழுவதும் பயங்கரவாத இயக்கங்கள் மனிதகுல மேம்பாட்டை அச்சுறுத்தி வருகின்றன. நம் நாட்டில் கூட மாநிலங்களுக்கு தேவையான பல வளர்ச்சித் திட்டங்களை சிலர் இடையூறு செய்கிறார்கள் என்பதை அவ்வப்போது நடந்துள்ள சம்பவங்களை பார்த்துள்ளோம்.
போராட்டம்
இதில் பயங்கரவாத சக்திகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதை நான் மட்டும் கூறவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கூடங்குளம் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக போராட்டங்களை தூண்டி விடுபவர்கள் யார் என்பதை கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஊழல்
சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா, ஊழல்மிக்க மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்று சொல்லியுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன. மோடி கூறுகையில், நான் ஏற்கெனவே சொல்வதைதான் திரும்ப சொல்கிறேன். மாநில அரசாங்கங்களின் செயல்பாட்டை மதிப்பிடுவது அந்த மாநில மக்களின் உரிமையாகும். நான் மிகவும் உரத்த குரலில் தெளிவாக சொல்ல விரும்புகிறேன்.
கடுமையாக யாரும் போராடவில்லை
எனது அரசாங்கம் ஊழலுக்கு எதிராக போராடுவதில் உறுதி பூண்டிருக்கிறது. ஊழல் எங்கிருந்தாலும் அதை எதிர்த்து போராடவேண்டும். சுதந்திரம் அடைந்ததிலிருந்து எந்த அரசாங்கமும் ஊழலுக்கு எதிராக நாங்கள் போராடியதுபோல் இவ்வளவு கடுமையாக போராடியதில்லை என்றார்.
விருப்பு வெறுப்பு
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த விவாதத்தின்போது ராகுல் காந்தி தனது உரையை முடித்தவுடன் நேராக வந்து உங்களை கட்டித் தழுவியபோது நாங்கள் அவரிடம் கூறியது என்ன? இதற்கு மோடி பதிலளிக்கையில், பெயரையும், புகழையும் தேடி அலைபவர்களுக்கு என தனியாக விருப்பு வெறுப்பு இருக்கும் என்பதை எல்லோரும் அறிவார்கள்.
வேலையாள்
அவர்கள் தங்கள் விதிகளைத்தான் பின்பற்றுவார்கள். யாரை வெறுப்பது?, எப்போது வெறுப்பது?, எப்படி வெறுப்பை வெளிகாட்டுவது? என்பதையெல்லாம் அவர்கள் தன்னிச்சையாக முடிவு செய்வார்கள். இதில் எல்லாம் என்னை போன்ற உழைப்பை நம்பியிருக்கும் வேலையாள்கள் என்ன சொல்ல முடியும்? என்றார் மோடி.