தமிழகத்து மஞ்சள் எறும்புகளை போல ஆந்திரா, ஒடிஷாவை அலறவிடும் சிவப்பு எறும்புகள்.. தப்பி ஓடும் மக்கள்
விசாகப்பட்டினம்/புவனேஸ்வர்: தமிழகத்தின் நத்தம் மலைப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் மஞ்சள் எறும்புகள் படையெடுத்து கால்நடைகளைத் தாக்கி பெரும் அச்சத்தை ஏற்படுத்தின. இதேபோல் ஆந்திரா-ஒடிஷா மாநிலங்களில் சிவப்பு எறும்புகள் கடியால் பொதுமக்கள் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
நத்தம் கரந்தமலையில் வனவிலங்குகள், கால்நடைகள் என எதனையுமே மஞ்சள் எறும்புகள் விட்டுவைக்கவில்லை. மலைப்பாம்புகளை கூட கடித்தே குதறி எடுத்தன இந்த மஞ்சள் எறும்புகள். கால்நடைகளின் கண்களைத்தான் இந்த மஞ்சள் எறும்புகள் குறிவைத்து தாக்கின. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மஞ்சள் எறும்பு வகை உலகின் மிக ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாம். மஞ்சள் எறும்புகள் அனைத்து வகை உயிரினங்களையும் உண்ணக் கூடிய அபாயகரமானவை. ஆகையால் மஞ்சள் எறும்புகள் குறித்து அலட்சியம் காட்டக் கூடாது என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.
இந்நிலையில் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் இசகலபேட்டா கிராம மக்கள் அம்மாநிலத்தையே அலறவைத்துள்ளது. சாரை சாரையாக அரசு மருத்துவமனைகளில் எறும்பு கடிக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த மக்கள். இசகலபேட்டா கிராம மக்களைத் தாக்கி வருவது சிவப்பு எறும்புகள் என்கின்றனர். அப்பகுதியில் கால் வைத்த இடமெல்லாம் எறும்புகள் பல லட்சக்கணக்கில் படையெடுத்து கொண்டே இருக்கின்றன. எறும்பு குன்றுகளை தகர்த்துவிட்டால் எப்படி படையெடுக்குமோ? அதேபோல் இப்போது படை எடுக்கின்றன.
மஞ்சள் எறும்புகளைப் போல இவை கடும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் இந்த சிவப்பு எறும்புகள் உடம்பில் ஊர்ந்தாலே போதும்.. எரிச்சலும் கட்டிகளும் உருவாகிவிடுகின்றன. அந்த இடத்தில் அழுத்தித் தேய்த்தால் அவ்வளவுதான் ரத்தம் வழிந்தோடுகிறது. இப்போது சிவப்பு எறும்பு கடிக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள்.
ஒடிஷாவின் பூரி மாவட்டத்திலும் இந்த சிவப்பு எறும்புகள் படையெடுத்து முகாமிட்டுள்ளன. பூரி தாலுகாவுக்குட்பட்ட Brahmansahi கிராமத்தில் 26 குடும்பங்கள் வசித்து வந்தன. இப்போது 26 குடும்பங்களும் அந்த கிராமத்தையே காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டன. பக்கத்து கிராம பொதுமக்கள் தங்கள் கால்களில் பாலிதீன் கவர்களை கட்டிக் கொண்டுதான் நடந்து செல்கின்றனர். இது தொடர்பாக ஆய்வுகளும் விசாரணைகளும் நடத்தப்பட்டு வருவதாக பூரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.